தமிழ்நாடு

tamil nadu

லிபியா நாட்டிற்கு சென்று சென்னை திரும்பிய பயணி கைது

By

Published : Apr 20, 2021, 4:33 PM IST

சென்னை: மத்திய அரசின் தடையை மீறி லிபியா நாட்டிற்கு சென்றவர், சென்னை விமான நிலையம் திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

arrest
arrest

கத்தாா் தலைநகா் தோகாவிலிருந்து கத்தாா் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு (ஏப்ரல் 19) சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த முகமது சமீம்(46) என்ற பயணி லிபியா நாட்டிலிருந்து இஸ்தான்புல் வந்து அங்கிருந்து கத்தாா் நாட்டிற்கு சென்று, கத்தாாிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்ததை அலுவலர்கள் கண்டுப்பிடித்தனர்.

லிபியா நாடு இந்தியா்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்ற பட்டியலில் உள்ளது. எனவே இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் 2016 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு நலன் கருதி இந்தியா்கள் யாரும் லிபியா நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று தடை விதித்துள்ளது. அந்த தடையை மீறி, முகமது சமீம் லிபியா நாட்டிற்கு சென்று வந்ததால், அவரை குடியுரிமை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முகமது சமீம், தான் பிரபலமான ஒரு மருந்து கம்பெனியில் பாா்மசிஸ்ட்டாக பணியாற்றி வருவதாகவும், அந்த கம்பெணி தான் தன்னை பணி நிமித்தமாக கடந்த 2019 ஆம் ஆண்டில் லிபியாவிற்கு அனுப்பிவைத்தது. முறையான ஆவணங்களுடன் அகமதாபாத் விமானநிலையத்திலிருந்து இணைப்பு விமானங்கள் மூலம் லிபியா சென்று, அங்கு 2 ஆண்டுகள் பணியில் இருந்தேன். அப்போது லிபியா தடை செய்யப்பட்ட நாடு என்று என்னிடம் கூறவில்லை என்று கூறினாா்.

இதை ஏற்றுக்கொள்ளாத குடியுரிமை அலுவலர்கள், இந்திய அரசால் பாதுகாப்பு இல்லாத நாடு என்று தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றதாக முகமது சமீம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பெரம்பலூா் பயணி ஒருவா் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details