சென்னை: திருவள்ளூர் மாவட்டம்பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் திருமுல்லைவாயலில் உள்ள ஹோண்டா இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள வாகனத்தை, 40 ஆயிரம் ரூபாய் முன்பணமாகச் செலுத்தி தவணை முறையில் வாங்கி உள்ளார்.
முதல் தவணைகூட கட்டாத நிலையில் வாகனத்தை வாங்கிய ஒரு சில தினங்களில் தொடர்ந்து அவ்வப்போது இன்ஜின் பகுதியில் பழுது ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் ஷோரூமுக்கு கொண்டு வந்து இருசக்கர வாகனத்தைச் சரி செய்து வந்துள்ளார். எனினும் தற்போது வரை 3 மாதத்தில் நான்கு முறை பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நொந்து போன கார்த்தி ஷோரூமிற்கு வந்து கேட்டதற்கு ஊழியர்கள் சரியான பதிலளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.
எனவே ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கார்த்திக் தனது புதிய பைக்கை ஷோரூமிற்கு எடுத்து வந்து வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு, ஒரு லிட்டர் பெட்ரோலை வாகனத்தின் மீது ஊற்றி வாகனத்தை இங்கேயே கொளுத்தி விடுவேன் என மிரட்டியதால் ஷோரூமில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து ஹோண்டா ஷோரூம் நிர்வாகிகள் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.