சென்னை:பொது நூலகத்துறையின்கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களில் நாளிதழ்கள், பருவ இதழ்கள் பெறுவதற்காக பொது நூலக இயக்குநரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் உள்ளது.
இந்த அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் 514 தமிழ்ப் பருவ இதழ்களும், 168 ஆங்கில பருவ இதழ்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் பெரும்பாலானவை நிறுத்தம் செய்யப்பட்டும், வாசகர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இதழ்களும் அடங்கி உள்ளன.
எனவே, வாசகர்கள், மாணவர்கள், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஆகியோரின் தேவையின் அடிப்படையில் பட்டியலை மறு சீரமைப்பு செய்வதற்காக 10 துறை சார் நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்தத் தேர்வுக்குழுவின் கூட்டம் கன்னிமாரா பாெது நூலகத்தில் பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் தலைமையில் நேற்று (மார்ச் 6) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இதழ்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விவாதிக்கப்பட்டன.