தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அடிச்சது ரூ.20 லட்சம் இல்ல.. ரூ.20 கோடி' - கொள்ளையர்களின் வாக்குமூலம்... திடீர் ட்விஸ்ட்

என்ஐஏ அதிகாரிகள் எனக்கூறி செல்போன் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் கொள்ளையடித்தது ரூ.20 லட்சம் அல்ல; 2 கோடி ரூபாய் என கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்து திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

By

Published : Dec 19, 2022, 8:18 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவில் சகோதரர்களுடன் வசித்து வருபவர், ஜமால். இவர் பர்மா பஜார் பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பின்னர், கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாகக் கூறி செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு சோதனையிட்டுள்ளனர். பின்னர் பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் கடையிலும் இந்த கும்பல் சோதனை நடத்தி, வீடு மற்றும் கடையில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாயினை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஜமால் விசாரித்தபோது வந்தது என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், தான் மோசடி செய்யப்பட்டது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஜமால் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். துறைமுகம் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாகத் தேடி வந்தனர்.

குறிப்பாக கொள்ளையர்களின் முக அடையாளங்கள் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து தீவிர விசாரணை நடத்தியபோது, 6 பேரும் கார் மூலம் ஊட்டிக்குத் தப்பிச்சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் தனிப்படையினர் ஊட்டிக்கு விரைந்த நிலையில், அந்த தகவல் அறிந்த 6 பேரும் செல்போன்களை அணைத்துவிட்டு, ஊட்டியில் இருந்து பேருந்து மூலம் கோவைக்கு தப்பிச் சென்றனர்.

காவல் துறையினரின் தொடர் விசாரணையில் 6 பேரும் கோவையில் இருந்து சேலம் வழியாக பழனிக்குச் சென்று தலைமறைவானதும், அதனைத் தொடர்ந்து காரைக்கால், விழுப்புரம் என மொத்தம் 6 மாவட்டங்களுக்கு கொள்ளைக் கும்பல் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையினர் தங்களை நெருங்கியதை அறிந்த கொள்ளை கும்பலான ராயபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பாயாக பணியாற்றி வரும் புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலையைச் சேர்ந்த கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வரும் தேவராஜ் மற்றும் ரவி ஆகிய 6 பேர் இன்று (டிச.19) ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மேலும், சரணடைந்த 6 பேரும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குதிரை பந்தயம் கட்டுபவர்கள் எனவும், பந்தயங்களில் தோற்று நஷ்டத்திற்கு ஆளானதால், இந்த கும்பலைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன் முத்தியால்பேடையைச் சேர்ந்த ஜமாலிடம் நிறைய பணம் உள்ளதாக தனக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து, கூட்டாளிகளான மற்றவர்களுக்கு மோசடிக்கான திட்டம் தீட்டியது தெரியவந்தது.

குறிப்பாக 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்ததாக புகார் அளித்திருந்த நிலையில், வழக்கின் திருப்பமாக கொள்ளைக் கும்பல் 2 கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஹவாலா பணம் என்பதால் காவல் துறையினரிடம் புகார் அளிக்கமாட்டார்கள் என எண்ணி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கொள்ளையர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 6 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதால், நாளை அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்யவுள்ளதாகவும், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகே ரூ.20 லட்சமா அல்லது 2 கோடி ரூபாயினை கொள்ளையடித்துள்ளனரா என்ற முழு விவரம் தெரியவரும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பப்-களுக்கு வரும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details