சென்னை கொரட்டூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அமர்நாத் (44). இவரது மனைவி நளினிகுமாரி. அமர்நாத் அதே பகுதியில் இரும்பு வியாபாரம் செய்துவருகின்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அமர்நாத்தை ஐந்து பேர் கொண்ட கும்பல் அண்ணாநகர் 18ஆவது பிரதான சாலையில் வைத்து காரில் கடத்திச் சென்றனர். பின்னர் அமர்நாத்தை தாக்கி அவரிடம் இருந்து இரண்டு லட்சம் பணம், தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு, அவரது செல்போன் மூலம் கனகா என்ற பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு 40 ஆயிரம் ரூபாய் பணப்பறிமாற்றம் (transfer) செய்துள்ளனர்.
பின்பு அமர்நாத்தை கடத்திய இடத்திலேயே இறக்கி விட்டு விட்டு அவரது வீட்டில் இருந்த காரையும் அந்த கும்பல் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமர்நாத் மனைவி நளினிகுமாரி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.