சென்னை:குடிநீர், அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமன்றி வணிக தேவைகளுக்கும் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் அதன் அளவு மிக வேகமாகக் குறையும். கடந்த வடகிழக்குப் பருவமழையால் பூமி குளிர்ந்ததோடு சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சென்னைவாசிகளை ஆசுவாசப்படுத்தும் அதே வேளையில், தனியார் தண்ணீர் லாரிகள் சென்னை புறநகரில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த விதிமீறலைக் கட்டுப்படுத்த பொதுப்பணித் துறை எந்த ஒரு கண்காணிப்புக் குழுவையும் இதுவரை அமைக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
நிலத்தடி நீரை சூறையாடும் தனியார் நிறுவனங்கள்
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஏறக்குறைய 10 ஆயிரம் லாரிகள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக உள்ளன. இதர லாரிகள் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக இருக்கின்றன. இந்த லாரிகள் வேளாண்மை, தனியார் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சுகின்றன.
கோடைக்காலம் தண்ணீரின் தேவை அதிகரித்ததை அடுத்து, லாரிகளின் இயக்கம் முன்பைவிட துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களுக்கு அதிகளவில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, அம்பத்தூர், தாம்பரம், பூந்தமல்லி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் தனியார் லாரிகள் அனுமதியின்றி தண்ணீரை எடுத்து, அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றன.
யுக்தி: சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள உழவர்களிடம் பேரம்போடும் லாரிகளின் உரிமையாளர்கள், குறைந்த விலை கொடுத்து தண்ணீரை எடுத்து அதிக விலைக்கு விநியோகம் செய்கின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. சுமார் 15 ஆயிரம் லிட்டர் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க குறைந்தபட்சமாக 800 லிருந்து 900 ரூபாய் கொடுக்கின்றனர். ஆனால் அதே 15 ஆயிரம் லிட்டரை நகரத்திற்குள் கொண்டுவந்து சுமார் இரண்டாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பதாகக் கூறப்படுகிறது.
கள நிலவரம்
பூமியில் சேகரமாகும் நிலத்தடி நீரை சுயலாபத்திற்காகச் சூறையாடுவதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறை அலுவலரிடம் கேட்டோம். ’வட கிழக்குப் பருவமழை சார்ந்து ஒரு ஆய்வுசெய்ய தொடங்கியிருக்கிறோம். அதில் நிலத்தடி நீர்மட்டம் கணக்கிடப்படும்.
தனியார் லாரிகள் நிலத்தடி நீரை எடுப்பதாகப் பொதுப்பணித் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சட்டவிரோதப்போக்கைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு வரும்போதெல்லாம், அதிக அளவிலான லாரிகள் போட்டிப் போட்டு நிலத்தடி நீரை அபகரித்து விற்கும்’ என்றார்.