சென்னை:மலேசியா நாட்டில் மூன்றாவது சர்வதேச சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், வயதின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நெடுங்கொம்பு, இரட்டைக் கொம்பு, வாள் வீச்சு போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலம்பம் அசோசியேஷனைச் சேர்ந்த 16 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், பல்வேறு பிரிவுகளில் எட்டு தங்கப் பதக்கம், ஆறு வெள்ளிப் பதக்கம், நான்கு வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இதையடுத்து சென்னை திரும்பிய பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் சிலம்பம் அசோசியேஷன் மற்றும் மாணவர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ஜெகதீசன், ''இந்திய நாட்டுக்காக வெளிநாடுகளில் சென்று சிலம்ப போட்டியில் தங்கப் பதங்களை வெல்ல வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கனவு. இதில், சென்னையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 16 மாணவ மாணவிகளும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் வென்று சாதனைப் படைத்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தியாவுக்காக வெற்றிபெற்று சாதனைப்படைத்து சென்னைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.