தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 22, 2023, 10:02 PM IST

ETV Bharat / state

மத்திய கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் - சு.வெங்கடேசன் எம்.பி. கேள்விக்கு கிடைத்த பதில்

நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் விளக்கம் அளித்துள்ளார்.

சு.வெங்கடேசன் அறிக்கை
சு.வெங்கடேசன் அறிக்கை

சென்னை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர் தற்கொலைகள் நிகழ்வதும், பட்டியல் சாதி பழங்குடியின மாணவர்கள் உயிர் பறி போவதும் பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.

அண்மையில் மும்பை ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள், மத்திய கல்வி நிறுவன வாரியாக எஸ்.சி, எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள், ஐஐடி மும்பை மாணவர் நல மையத்தின் தலைமை ஆலோசகரே இட ஒதுக்கீடுக்கு எதிராக பகிரங்கமாக பேசினாரா, இப்படிப்பட்டவர்கள் இது போன்ற குழுக்களில் இருந்தால் எப்படி பட்டியல் சாதி, பழங்குடியின மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்? பொருத்தமான நபர்களை இது போன்ற குழுக்களில் நியமிக்க என்ன ஏற்பாடுகள்? இது போன்ற குழுக்களில் பட்டியல் சாதி பழங்குடியின பிரதிநிதித்துவம் இருப்பதற்கு வழி காட்டல்கள் ஏதேனும் உண்டா? என்று கேள்விகள் கேட்டிருந்தேன்.

அதற்கு கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ள பதிலில், 108 மத்திய கல்வி நிறுவனங்களில் 87ல் எஸ்.சி, எஸ்.டி செல்கள் உள்ளன. மற்ற நிறுவனங்களில் சம வாய்ப்பு செல், மாணவர் குறை தீர் செல், மாணவர் குறை தீர் குழு, மாணவர் சமூக மன்றம், குறை தீர் அலுவலர் ஆகிய ஏற்பாடுகள் உள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் ஐஐடிக்களில் 33, என்ஐடிக்களில் 24, ஐஐஎம்களில் 4 என மொத்தம் 61 மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என கூறியிருக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கை -2020 எப்படி மாணவர் ஆலோசனை, உணர்வு சமனிலை, விளையாட்டு, கலாசாரம், சமூக சேவை, சூழலியல் ஆகியன மூலம் மாணவர்களின் உளவலிமையை மேம்படுத்த வழி சொல்லியுள்ளது என்றும் விவரித்துள்ளார். மும்பை ஐஐடியில் இறந்த மாணவர் குடும்பத்திற்கு உரிய ஆதரவை அந்நிறுவனம் தந்து வருவதாகவும், உள் விசாரணை நடைபெற்று வருவதோடு, மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்ட மாணவர் நல மைய தலைமை ஆலோசகர் நீக்கப்பட்டு பட்டியல் சாதி, பழங்குடி பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமைச்சரின் பதில் அதிர்ச்சியை தருகிறது. 61 தற்கொலைகள் என்பது "மன அழுத்த சூழல்" மத்திய கல்வி நிறுவனங்களில் தொடர்வதையே காண்பிக்கிறது. இன்னும் 21 நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி செல்கள் இல்லை என்பது இவ்வளவு தற்கொலைகளில் இருந்து இந்த உயர் கல்வி நிறுவனங்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதும், அரசு தரப்பில் இருந்தும் கண்காணித்து உறுதி செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது. அதற்குப் பதிலாக வேறு பெயர்களில் உள்ள பொதுவான குழுக்களை, புகார் முறைமைகளை கணக்கில் காண்பிக்க அமைச்சர் முயற்சிப்பது வேதனையானது. தற்கொலைகள் நிகழ்வதற்காக காத்திருப்பது போன்று அந்த நிறுவனங்களும் அரசும் இருப்பது கண்டிக்கத்தக்கது.

எஸ்.சி, எஸ்.டி செல் என்ற பெயரிலேயே அந்த செல்கள் இயங்க வேண்டும். அப்போதுதான் நம்பிக்கை பிறக்கும் என்ற சாதாரண புரிதல் கூட இல்லையா? இல்லை சனாதன அணுகுமுறையின் பிரதிபலிப்பா என்ற கேள்விகள்தான் எழுகின்றன. எஸ்.சி, எஸ்.டி செல்கள் இருப்பதாக கூறப்படும் 87 மத்திய கல்வி நிலையங்களிலும் அவை செயல்படுகின்றனவா? மாணவர்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா? செயல்பாட்டிற்கான வழி காட்டல்கள் வழங்கப்பட்டுள்ளனவா? என்பதெல்லாம் தனிக் கேள்விகள்.

இதையெல்லாம் 9 ஆண்டுகளில் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் தவறியுள்ள மத்திய கல்வி அமைச்சகம் புது மருந்தைக் கண்டுபிடித்தது போல "புதிய கல்விக் கொள்கை 2020" தற்கொலைகளை தடுத்து விடும் என்று நீட்டி முழக்கி வகுப்பு எடுத்திருப்பது ரசிக்க இயலாத நகைச்சுவையாகும். ஏக்கத்தோடும், பெற்றோரின் எதிர்பார்ப்புகளை சுமந்தும், சமூகத் தடைகளை தாண்டியும் உயர்கல்வி நிறுவனங்களில் அடியெடுத்து வைக்கும் ரோகித் வெமுலாக்களும், தர்ஷன் சோலங்கிகளும் வாழ்வதற்கு வழி சொல்லுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து; அமைச்சர் ஆய்வு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details