தமிழ்நாடு

tamil nadu

'திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம்; பயனடைந்த லட்சக்கணக்கான விவசாயிகள்!'

By

Published : Oct 4, 2020, 3:50 AM IST

Updated : Oct 4, 2020, 5:51 AM IST

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஐந்து லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாய பெருமக்கள் பயனடைந்ததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

இது குறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வெளியிட்ட அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020இல் இரண்டாயிரத்து 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐந்து லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாய பெருமக்கள் பயனடைந்துள்ளனர். இந்தக் கொள்முதல் அளவானது தமிழ்நாடு வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.

தற்போது, 1.10.2020 அன்று தொடங்கியுள்ள 2020-2021 கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1888 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1868 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

இத்துடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.50 வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1958 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1918 வழங்கப்படும்.

ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும் என்பதாலும், அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதாலும்,

விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலையில் விற்பனைசெய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Oct 4, 2020, 5:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details