சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் இந்திய அணிகள் 5 வது சுற்றில் விளையாடின.
ஓபன் A அணி Vs ரோமானியா :இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா - போக்டான் டேனியல் ஆடிய ஆட்டத்தில் (வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரி, 0.5-0.5 என சமனில் முடித்தார். அடுத்ததாக விதித் சந்தோஷ் குஜராத்தி - கான்ஸ்டெண்டின் லுபுலெஸ்கு விளையாடும்போது, கருப்பு காய்களுடன் களம் கண்ட விதித், ஆட்டத்தை 0.5-0.5 என்ற கணக்கில் சமனில் முடித்தார்.
தொடர்ந்து அர்ஜூன் எரிகேசி - மிர்சியா எமிலியன் பார்லிகிராஸ் ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மேலும், எஸ்.எல். நாராயணன் - லாட் கிறிஸ்டியன் ஜியான் ஆடிய ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட நாராயணன், 0.5-0.5 என்ற கணக்கில் ஆட்டத்தை சமனில் முடித்தார்.
சசிகிரண் மட்டும் ஓய்வு நிலையில் இருந்தார். இதனால் இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஓபன் B Vs ஸ்பெயின் :நேற்றைய முன்தினம் ஸ்பெயின் அணி, இந்தியா சி அணி உடன் விளையாடி, 2.5 - 1.5 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது. இதனைத்தொடர்ந்து நேற்றைய போட்டியில் இந்தியா ‘பி’ அணியுடன் மோதியது.
இதில், குகேஷ் - அலெக்சி ஷிரோவ் விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 1-0 கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து சரின் நிஹல் - டேவிட் ஆண்டன் குய்ஜர் விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமாடிய சரின், 0.5-0.5 என்ற புள்ளி கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார்.
தொடர்ந்து பிரக்ஞானந்தா - சாண்டோஸ் லடாசா ஆடியபோது, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 0-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதேநேரம், அதிபன் - இடுரிஸாகா பொனெல்லி விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அதிபன், 1-0 என்ற கணக்கில் வெற்றி அடைந்தார்.
இந்த சுற்றில் ரவுணிக் சத்வாணி ஓய்வில் இருந்தார். இதன் மூலம் இந்திய ஓபன் ‘பி’ அணி 2.5-1.5 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது. மேலும் இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட்டில் தனது முதல் தோல்வியை தழுவினார்.
ஓபன் C Vs சிலி :சூர்யா சேகர் கங்குலி - கிறிஸ்டோபல் ஹென்ரிக்யூஸ் வில்லாக்ரா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட சூர்யா, 0.5-0.5 என்ற கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார். இதனையடுத்து வெள்ளை நிற காய்களுடன் களமாடிய எஸ்.பி.சேதுராமன், இவான் மோரோவிச் ஃபெர்னாண்டஸை 1-0 கணக்கில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து கார்த்திகேயன் முரளி - பாப்லோ ஹெர்ரேரா ஆடும்போது, கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட முரளி, 0-1 கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதேபோல், அபிமன்யு புராணிக் - ஹூகோ லோப் சில்வா விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அபிமன்யு, 1-0 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.