தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 18, 2022, 6:47 PM IST

ETV Bharat / state

'உள்ளாட்சி தேர்தல் பணியில் 22 ஆயிரம் காவலர்கள்' - சென்னை காவல்துறை

சென்னையில் நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 22 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளவதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உள்ளாட்சி தேர்தல் பணியில் 22 ஆயிரம் காவலர்கள்' - சென்னை காவல்துறை
'உள்ளாட்சி தேர்தல் பணியில் 22 ஆயிரம் காவலர்கள்' - சென்னை காவல்துறை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் (பிப்ரவரி 19) நடைபெறவுள்ளது. சென்னையில் மொத்தம் 200 வார்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்களிக்க 1,197 வாக்குச்சாவடி மையங்களும், 5,013 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 213 பதற்றமான வாக்குசாவடி மையங்களில், 757 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பதற்றமான 54 வாக்குச் சாவடிகளில், 143 வாக்குப்பதிவு மையங்கள் அமைந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உட்பட மொத்தம் 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

இயந்திரங்கள் ஒப்படைப்பு

அனைத்து வாக்குசாவடிகளிலும் ஒரு காவலர், சிறப்பு காவலர்களால் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. 390 மொபைல் பார்டிகளில் துப்பாக்கியுடன் ஒரு உதவி ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய காவலர் பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளில் 1 உதவி ஆய்வாளர், 4 காவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 1 அதி விரைவு படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக வாக்குப்பதிவு மையங்கள் உள்ள வாக்குசாவடிகளில் கூட்டத்தை நெறிப்படுத்த, ஒரு உதவி ஆய்வாளர், 4 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 72 தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

390 மொபைல் பார்ட்டி அலுவலர்கள், உரிய ஆயுதம் ஏந்திய காவலர்கள் ஆகியோர் இன்று (பிப்ரவரி 18) மின்னணு இயந்திரங்களை அந்தந்த இவிஎம் (EVM) பாதுகாப்பு அறைகளிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின்பு, அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் இயந்திரங்கள் ஒப்படைக்கப்படவுள்ளன.

மொத்தம் 22 ஆயிரம் காவலர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் காவல்துறையினர், 4 ஆயிரம் ஊர்காவல் படையினர் என மொத்தமாக 22 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தேர்தலின்போது வாக்குச்சாவடி மையங்களிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் அரசியல் கட்சி சார்ந்த அலுவலகமோ, வாக்குசேகரிப்போ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டருக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் சம்பந்தமான புகார்களை சென்னை காவல் தேர்தல் பிரிவு எண் 044-23452437, அவசர உதவி எண் 100, கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிறையிலிருந்து வந்த கட்சி பிரமுகருக்கு பாலபிஷேகம் - வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details