சென்னை:அதிமுகவில் கடந்தாண்டு இறுதியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒற்றை வாக்கு முறையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என்று இரு தலைவர்களாக இருந்ததால் உட்கட்சி தேர்தலில் சரிசமமாக பிரித்து கொண்டு நிர்வாகிகளை நியமனம் செய்தனர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரண்டு பேரும் "இரட்டை குழல் துப்பாக்கி" போன்று செயல்படுகின்றனர் என கூறப்பட்டது. பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்று ஈபிஎஸ் குற்றச்சாட்டு வைத்தார். பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக விலகி தனித்து போட்டியிட்டது. பெரும்பாலான இடங்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் 21 மாநகராட்சியும் திமுக வசமானது.
வெளி தோற்றத்திற்கு மகிழ்ச்சியாக இருவரும் இருப்பதுபோல காட்டி கொண்டாலும், அதிமுக இரு அணிகளாக தான் செயல்படுகிறது என்று பேசப்பட்டது. ஓபிஎஸ் தேனியிலும், ஈபிஎஸ் சேலத்திலும் இருந்து அரசியல் செய்துகொண்டிருந்தனர். ஆளுங்கட்சியான திமுக செயல்பாடுகள் குறித்து அவ்வபோது ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்கிடையில் "சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும்" என ஓபிஎஸ் கூறி வந்தார். இது ஈபிஎஸ் அணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஈபிஎஸ் அணியோ, சசிகலா குறித்து யாராவது பேசினாலோ அல்லது அவரை சென்று பார்த்தாலோ அடுத்த நாளே அவரை கட்சியில் இருந்து ஓபிஎஸ் அனுமதியோடு நீக்கியது. குறிப்பாக ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா, அன்வர் ராஜா போன்ற மேல்மட்ட நிர்வாகிகளையே கட்சியில் இருந்து ஈபிஎஸ் நீக்கினார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கலந்து கொண்டு "திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது" என ஆளுங்கட்சிக்கு சாதகமாக கருத்து தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் திமுகவுடன் சுமூக போக்கை கடைபிடிக்கிறார் என்று ஈபிஎஸ் தரப்பு மறைமுகமாக குற்றம்சாட்டியது.
இப்படியே இரண்டு தரப்பும் தங்களால் முடிந்த அளவிற்கு உட்கட்சி மோதலை மேற்கொண்டனர். இதனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக செயல்படாத நிலையில் இருந்தது. இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு பாஜக எதிர்க்கட்சி போல அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டது. இதற்கு காரணம் அண்ணாமலையின் செயல்பாடுகளே என கூறப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்ததால் அண்ணாமலைக்கு சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு கிடைத்தது. இது போன்று அதிமுகவில் இரண்டு தரப்பும் நகர்ந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், உட்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை கொண்டு பொதுக்குழு நடத்தி அதன் மூலம் தீர்மானம் நிறைவேற்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெற்றது.
பொதுக்குழு ஜூன் 23ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் "ஒற்றை தலைமை வேண்டும்" என்ற முழக்கம் அக்கட்சிக்குள் புயலை ஏற்படுத்தியது. அன்றில் இருந்து 'ஒற்றை தலைமை' புயல் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. ஒற்றை தலைமைக்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ஈபிஎஸ் அணி அதற்காக முயற்சியை முழுமையாக மேற்கொண்டது. கடந்த மே மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக சார்பாக முதலில் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்கு, "நான் ஒரு மாநிலங்களை உறுப்பினரை நியமனம் செய்வேன்" என ஓபிஎஸ் கையெழுத்து போட மறுத்துவிட்டார். ஓபிஎஸ்சின் எண்ணப்படியே இரண்டு இடங்களில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் இராமநாதபுரத்தில் ஒன்றிய செயலாளராக இருந்த தர்மர் என்பவரை ஓபிஎஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார்.
இதில், ஈபிஎஸ் தரப்பில் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். "மாநிலங்களவை உறுப்பினராக தான் தேர்வு செய்யப்படாததற்கு ஓபிஎஸ் காரணம்" என ஜெயக்குமார் அதிருப்தியில் இருந்தார். இதனால், ஜூன்.14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக பொது வெளியில் அறிவித்து களத்தை சூடாக்கினார். அப்போது இருந்து ஒற்றை தலைமை விவகாரம் வேகம் எடுக்க ஆரம்பித்தது.
இந்த ஒற்றை தலைமையை ஏற்க மறுத்த ஓபிஎஸ், தனக்கு தலைமை அங்கீகாரம் இல்லாமல்போய்விடும் என்ற நோக்குடன், பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முதலில் பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், ஜூன்.23ஆம் காலையில், ஏற்கனவே தயார் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சென்னை வானகரத்தில் உள்ள பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், "23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுகிறது" என்று ஆவேசமாக குரல் எழுப்பினார்.
இதனிடையே ஓபிஎஸ் மீது பாட்டில்களை பொதுக்குழு உறுப்பினர்கள் வீசம் சம்பவங்கள் அரங்கேறியது. இதனால், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பாதியிலேயே வெளியேறினார். அதே பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த பொதுக்குழு ஜூலை.11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த பொதுக்குழுவையும் தடை செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்தார். அதில், பல்வேறு முறை வழக்கு விசாரணை செய்யப்பட்டு ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.
அதன்படி, ஜூலை 11ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கலந்து கொள்ளலாமல், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டு அதிமுக தலைமை அலுவலகம் வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.