தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தியாவசிய பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கம்!

சென்னை: அத்தியாவசியம், அவசரப் பணிகளுக்காக இன்று (மே 10) 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : May 10, 2021, 2:29 PM IST

அத்தியாவசிய பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கம்
அத்தியாவசிய பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (மே 10) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதில், அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால், அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் ஆட்கள் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகிற வகையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக 200 பேருந்துகள் இன்று (மே 10) முதல் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இவை முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர், சென்னை பெருநகர் மாநகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பேருந்தில் பயணிக்குமாறு சென்னை மாநகர போக்குவரத்துத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details