17 திருமண மண்டபங்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம்!
மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மூலம் நிகழ்ச்சிகள் நடைபெற்ற 946 இடங்களில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த திருமண மண்டபங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில், நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களில் இருந்து ரூபாய் 84 ஆயிரத்தை அபராதமாக மாநகராட்சி வசூலித்துள்ளது.
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 30 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது அதற்கடுத்து அண்ணாநகர் மண்டலத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மண்டபங்கள் அடிப்படையில் அதிகபட்சமாக மாதாவரம் மண்டலத்தில் ஐந்து மண்டபங்களும், அதற்கடுத்து அண்ணாநகர் மண்டலத்தில் நான்கு மண்டபங்களும் அபராதம் செலுத்தியுள்ளன.
இதுவரை மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மூலம் நிகழ்ச்சிகள் நடைபெற்ற 946 இடங்களில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.