தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2021, 11:17 AM IST

Updated : Jun 24, 2021, 12:33 PM IST

ETV Bharat / state

ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்: அதிரடி பேச்சில் அசரடித்த ஸ்டாலின்

16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், பல முக்கிய விஷயங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்:
ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்:

சென்னை: 16ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டதொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்வது தொடர்பான சட்ட மசோதாக்கள் நேற்று (ஜூன் 23) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்படுகிறது.

இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், 'உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்ட மசோதாக்கள் மற்றும் வருவாய் பற்றாக்குறையை நீக்குவதற்கும் நிதிப்பற்றாக்குறையை 3% விழுக்காடாக குறைப்பதற்கும்; கடன் வரம்பை பெறுவதற்கான காலவரம்பை 2024 மார்ச் வரை நீட்டிப்பதற்கான சட்ட மசோதாக்கள் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது.

ஆளுநருக்கு நன்றி. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. கொளத்தூர் தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நீதிக்கட்சியின் நீட்சி திமுக

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் தற்பொழுதுள்ள திமுக ஆட்சி.

கடந்த இரண்டு நாட்களாக அவையில் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்ட கருத்துகளை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வேன்.

மேலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.

ஆளுநர் உரை ட்ரெய்லர் தான்

ஆளுநர் உரை ட்ரெய்லர் போன்றது. கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஆட்சி அமைத்து இன்றுடன் 49 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 2 கோடியே 11 லட்சம் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவருக்கு இலவசப் பயணம் தரப்படுகிறது.

அண்ணாவின் அரசியல் வாரிசு நான்: அதிரடி பேச்சில் அசரடித்த ஸ்டாலின்

அண்ணாவின் அரசியல் வாரிசு

நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதியின் தொடர்ச்சி தான் நானும் இந்த ஆட்சியும். ஏனென்றால், நான் அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு.

கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கடந்த 47 நாட்களில் 69 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணி தொடக்கத்தில் சவாலாக இருந்தாலும்; படிப்படியாக நோய்க் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்று விரும்புகிறேன். அப்படி வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் ஆக உள்ளது.

'நடுவுல கொஞ்சம் அதிமுகவைக் காணோம்'

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம்போல், பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அதிமுக மறைந்துவிட்டதா?

ஏப்ரல் மாதத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த தவறியது தான், கரோனா பரவல் அதிகரிக்கக் காரணம். அதற்கு அதிமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

கரோனா தடுப்புப் பணிகளை பொறுத்தவரையில், இது மக்கள் நலன் சார்ந்த பிரச்னை. இதைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'ஒன்றிய அரசு' எனும் சொல்லாடலைத் தான் தொடர்ந்து பயன்படுத்துவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Jun 24, 2021, 12:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details