சென்னை:கடந்த 2020ஆம் ஆண்டு கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனை, ஆர்.எம்.கே.வி சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, திருச்சி பதஞ்சலி சில்க்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களில் போலியான ஆவணங்களைக் கொடுத்து ஒரு நபர் நிதிப் பிரிவில் பணியாற்றி வந்ததாகவும், அதன் பிறகு நான்கு நிறுவனங்களிலிருந்தும் மொத்தம் ரூ.16 லட்சம் வரை திருடி விட்டுத் தப்பிச் சென்றதாகக் கடையின் உரிமையாளர்கள் கோயம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரின் புகைப்படத்தை வைத்துக் கடந்த ஒன்றரை வருடங்களாகத் தேடி வந்துள்ளனர். மேலும் அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை செய்ததில், சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் உடனடியாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு கோவை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் தனிப்படை காவல்துறையினர் கிண்டியில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த, அந்த திருடனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் சுவாரசிய தகவல் வெளியானது.
அந்நபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பதும், இவன் என்ஜினீயரிங் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. மேலும், யுவராஜ் சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு, பல நிறுவனங்களில் லட்சக்கணக்கில் திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.