தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு : 8.75 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் - மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 13ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தனித்தேர்வர்கள் உள்பட 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் இத்தேர்வை எழுதவுள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

By

Published : Mar 10, 2023, 5:11 PM IST

Updated : Mar 10, 2023, 9:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 13ஆம் தேதி தொடங்கவுள்ளது. பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதில், "2022-23ஆம் கல்வியாண்டில் 12,11ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைகிறது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதவுள்ளனர்.

இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள் - 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள்- மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுதுகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 3,185 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7 ஆயிரத்து 728 மாணவிகள் என 14 ஆயிரத்து 710 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 மாணவர்கள் - 8 ஆயிரத்து 776 மாணவிகள் - 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என 23 ஆயிரத்து 747 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளில் 2,925 மாணவர்கள் - 2,281 மாணவிகள் என 5,206 பேர் எழுத உள்ளனர். சிறைவாசிகள் 90 பேர் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகிய 8 சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 405 பள்ளிகளிலிருந்து 180 தேர்வுமையங்களில் மொத்தம் 45,982 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 23,827 பேர் மாணவிகள் - 22,155 பேர் மாணவர்கள்.

எந்தவித புகாரும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்காக மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலர்கள், மாவட்டங்களுக்கு மேற்பார்வை பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் மாற்றுதிறனாளிகள் 5,206 பேருக்கு தனி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசின் உத்தரவின்படி அவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் விடைத்தாள் மற்றும் முகப்புத் தாள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வின் போது விடைத்தாளில் தேர்வர்களது புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து கையொழுத்திட்டால் மட்டும் போதுமானது.

கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர் பணியில் உள்ளார். மேலும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11, 12ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையை 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Exam Fever: பொதுத் தேர்வினை அச்சமின்றி எதிர்க்கொள்வது எவ்வாறு..? கல்வி உளவியலாளர் ஆலோசனை

Last Updated : Mar 10, 2023, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details