தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 26, 2020, 4:41 PM IST

ETV Bharat / state

30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ரூ.2 கோடிக்கும் மேல் இழப்பு

செங்கல்பட்டு: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததில் ரூ.2 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ரூ.2 கோடி நாசம்
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ரூ.2 கோடி நாசம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம், முனியந்தாங்கல், வேடந்தாங்கல், முதுகரை உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அப்பகுதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவந்தது.

அதையடுத்து கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 200, 300 மூட்டைகள் மட்டுமே அரசு கொள்முதல் செய்துவந்தது. மீதமுள்ள மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை முதல் சுமார் 3 மணி நேரம் விட்டுவிட்டு பெய்த கனமழையால் மொறப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகின. அதனால் விவசாயிகளுக்கு சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ரூ.2 கோடி இழப்பு

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "அரசு உரிய நேரத்தில் நாள்தோறும் ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்திருந்தால் எங்களுடைய நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் அடைந்திருக்காது.

உரிய விலை கிடைக்கவில்லை என்பதால்தான் சுமார் 20, 25 நாள்களாக நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை வைத்திருந்தோம். ஆனால் இப்போது மழை காரணமாக மூட்டைகள் நனைந்து நாசமாகின. எனவே அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:தாமதமாகும் நெல் கொள்முதல்: விவசாயிகள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details