தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அச்சிறுப்பாக்கத்தில் தார்ச்சாலை அமைப்பதில் முறைகேடு-புகார் அளிக்க சென்ற மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டம்.. - irregularities

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில், அவர்கள் அதிகாரிகளால் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக பேரூராட்சி அலுவலகம் உள்ளேயே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க சென்ற மக்கள் போராட்டம்
பேரூராட்சி முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க சென்ற மக்கள் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 2:54 PM IST

பேரூராட்சி முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க சென்ற மக்கள் போராட்டம்

செங்கல்பட்டு:அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்துக்கு உட்பட்டது. இங்குள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.கவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இங்கு நடைபெறும் பணிகள் பெரும்பாலும் முறைகேடாகவும், தரமற்று நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள ஜின்னா நகர் குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற வகையில் இந்தச் சாலை அமைக்கப்பட்டதால், சில நாட்களிலேயே சாலை பெயர்ந்து வருகிறது.

வெறும் கைகளால் பெயர்த்து எடுத்து விடும் நிலையில் படுமோசமாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள கஸ்தூரி நகருக்கு குடிநீர் விநியோகிக்கும் பைப்லைன் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்கிறது. இந்த பைப் லைன் சமீபத்தில் பழுதடைந்ததால், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இந்தப் பிரச்னைகள் குறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று (ஆகஸ்ட் 21) அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் சென்று நேரடியாக பிரச்சனை குறித்து கூறி நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளனர்.

இதையும் படிங்க:பல்க் ஆர்டர் எனக் கூறி ரூ.43 லட்சம் மோசடி... 3 வருடங்களாக போராடும் முந்திரி வியாபாரி.. பிளாட்பாரத்தில் பிழைப்பு நடத்தும் அவலம்!

அதற்கு அதிகாரிகள் சரியான பதில் அளிக்காமல் இருந்ததோடு மட்டுமின்றி மக்களிடம் மரியாதை குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதிவாசிகள் திடீரென அலுவலகத்தின் உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பேரூராட்சி தலைவர் நந்தினி, வராமல் அவரது கணவர் வந்து பேசியதால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக பொதுமக்களை அதிகாரிகள் சமாளித்து அனுப்பி வைத்தனர்.

பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், திடீரென பேரூராட்சி அலுவலகம் உள்ளே நடைபெற்ற போராட்டத்தால், அச்சிறுப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சென்னையில் டேங்கர் லாரிகளின் மூலம் நிலத்தடி நீர் கொள்ளை.. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details