சென்னை: 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கினை எட்டவும் தமிழகத்தில் சமச்சீரான பொருளாதாரம் மற்றும் இளைஞர்களுக்கான ஏராளமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
இந்த நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு செங்கல்பட்டு மஹிந்திரா சிட்டியில், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்கென மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தை 125 ஏக்கர் பரப்பளவில் நிறுவியது. இது உலக அளவில் மோட்டார் வாகனம் மற்றும் டிராக்டர் தயாரிப்புகளின் முதலாவது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக விளங்கி வருகிறது. இங்கு தங்கள் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்களையும், டிராக்டர்களையும் இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் செய்யார் சிப்காட் தொழில் பூங்காவில், 454 ஏக்கர் பரப்பளவில் வாகனங்களை சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்கான சோதனை தடத்தையும் அமைத்துள்ளது.