தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 16, 2022, 5:16 PM IST

ETV Bharat / state

கோயிலை இடிச்சா மூணு நாள்ல சுடுகாட்டுக்கு போவ... கெடு கொடுத்த பெண் சாமியார் - அலறியடித்து ஓடிய அதிகாரிகள்

நீர்நிலைப் புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த காளி கோயிலை இடிக்க வந்த அதிகாரிகள், மூன்று நாள்களுக்குள் சுடுகாட்டுக்குப் போக வேண்டும் என்று சாபம் விட்டு சாமி ஆடிய பெண் சாமியாரால் அதிகாரிகள் ஜெர்க் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலை இடிச்சா மூணு நாள்ல சுடுகாட்டுக்கு போவ
கோயிலை இடிச்சா மூணு நாள்ல சுடுகாட்டுக்கு போவ

செங்கல்பட்டு:வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியில், நீர்நிலைப் புறம்போக்கில் காளி கோயில் ஒன்றை அமைத்து சிலர் வழிபட்டு வந்தனர். அப்பகுதி சுற்று வட்டாரத்தில் வசிக்கும் திருநங்கைகள் உள்பட பொதுமக்கள், இந்த கோயிலுக்கு வந்து பூஜை புனஸ்காரங்கள் செய்வது பேய் ஓட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நீர்நிலைப் புறம்போக்கில் இந்த கோயில் கட்டப்பட்டு இருப்பதால், கோயிலை அகற்றுவதற்காக வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறை பாதுகாப்புடன் இன்று (அக்.16) காலை வந்தனர். கோயிலை இடிக்கக் கூடாது என்று கூறி திருநங்கைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

ஆனாலும் அவர்களிடம் நீர்நிலைப் புறம்போக்கில் கோயில் இருப்பதை எடுத்துக் கூறிய அதிகாரிகள் கோயிலை இடித்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனிடையே திடீரென ஆவேச மடைந்த பெண் சாமியார் ஒருவர், காய்ந்த மிளகாயை அரைத்து, அங்கிருந்த சாமி சிலைகள் மீது ஆவேசத்துடன் தெளித்து அபிஷேகம் செய்து, இந்தக் கோயிலை இடிக்கும் அதிகாரிகள் மூன்று நாள்களுக்குள் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சாபம் விட்டு அதிகாரிகளை அலறச் செய்தார்.

அதோடு மட்டுமல்லாமல் தன் முகத்தின் மீதும் மிளகாய் விழுதை ஊற்றிக்கொண்டு ஆட ஆரம்பித்தார். அருகிலிருந்தோர் அவரை இழுத்துச் சென்று அவர் முகத்தில் தண்ணீர் ஊற்றிக் கழுவினர். இதனிடையே இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலரும் அங்கு வந்ததால் பதற்றம் அதிகரித்தது.

கோயிலை இடிச்சா மூணு நாள்ல சுடுகாட்டுக்கு போவ

கோயிலை இடிக்கக் கூடாது என்றும், மேற்கூறையை மட்டும் தாங்களே அகற்றி விடுவதாகவும் சாமி சிலைகளை அகற்ற வேண்டாம் என்றும் அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கூடுதலாக இருந்த சில இடங்களை மட்டும் இடித்துத் தள்ளிய அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் உள்ளனர். கூடுதல் பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:13 வயது சிறுமியை திருமணம் செய்த தீட்சிதர் கைது - இதர தீட்சிதர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details