தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன குட்டிக்கதை செங்கல்பட்டு:டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் தனியார் அறக்கட்டளைகள் இணைந்து ஹைபிரிட் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை உருவாக்கி, நாடு முழுவதும் இருந்து 3,500 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுத்து திட்டத்தில் ஈடுபடுத்தினர். இவர்கள் ஒன்றிணைந்து 150 சிறிய ரக செயற்கைக் கோள்களை உருவாக்கியிருந்தனர்.
இந்த செயற்கைகோள்கள் இன்று (பிப்.19) செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள பட்டிப்புலம் என்ற பகுதியில் இருந்து, இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டன. இந்த விழாவில் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.
அப்போது, பேசிய தமிழிசை சௌந்தரராஜன், முன்பெல்லாம் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் பொருள்கள் மீது மட்டுமே நமக்கு மோகம் இருந்தது. அந்த நாட்டின் பொருள்களே நன்றாக இருக்கும். நன்றாக வேலை செய்யும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால், இப்போது மாறிவிட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு மதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் சென்னையில் ஆட்டோ ஏறுகிறார். அப்போது அவர் நமது பேருந்து, லாரி, கார்கள் எல்லாம் மெதுவாக செல்வதை கவனித்துவிட்டு, இந்தியாவில் எல்லாம் மெதுவாக செல்கின்றன. அமெரிக்காவில் வேகமாக சென்றுவிடலாம் என்று ஆட்டோ ஓட்டுநரிடம் சொல்கிறார். இதையடுத்து அவர் சொன்ன இடம் வந்துவிடுகிறது.
அப்போது ஆட்டோகார அண்ணன் ரூ.400 கேட்கிறார். இதற்கு அந்த அமெரிக்கர், சிறிது தூரத்துக்கு எதற்கு ரூ.400 கேட்கிறீர்கள் என்ற அதிருப்தி தெரிவிக்கிறார். அதற்கு, ஆட்டோ ஓட்டுநர், இந்த ஆட்டோ இந்தியாவில் செய்தது, ஆனால் ஆட்டோவின் மீட்டர் அமெரிக்காவில் செய்தது, அதனால் வேகமாக ஓடுகிறது என்று சொல்லி அவருக்கு பாடம் புகட்டுகிறார் எனத் தெரிவித்தார்.
இந்த ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட் மூலம் ஏவப்படும் செயற்கைக் கோள்கள் மூலமாக, வளி மண்டல நிலை மற்றும் கதிர்வீச்சுத் தன்மை ஆகியவை குறித்த ஆராய்ச்சித் தகவல்களைப் பெறமுடியும். இந்தியா முழுமையிலும் இருந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இந்த திட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து 200 மீனவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும், தமிழ்நாட்டை சேர்ந்த 60 பழங்குடி இன மாணவர்கள் அடங்கும்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்ந்திருக்கிறது - கே.எஸ். அழகிரி