செங்கல்பட்டு: சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஜமுனா லேப் டெக்னீஷியனாக தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரும் அந்த மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றினார்.
ஆனந்தின் மனைவி ஜமுனா, ராஜா இருவரும் நட்பாக பழகியுள்ளனர். நாளடைவில் அவர்களது உறவு நெருக்கமடைந்து முறையற்ற உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜமுனாவின் கணவர் ஆனந்த் தனது மனைவி கண்டித்துள்ளார். அதன் பின்னர், ராஜாவிடம் பேச்சுவார்த்தையை நிறுத்துவிட்டதாக ஜமுனா தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது.
திடீரென பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ராஜா, ஜமுனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜா ரசாயனத்தை ஜமுனா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர், ஜமுனாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.