சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதைப்பொருட்களால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்து மாணவர்களும், இளைஞர்களும் அறிந்துகொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், நலப்பணிகள் இணை இயக்குநர் மாலதி பிரகாஷ், முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு பதாகைகளை ஏந்திக்கொண்டும் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
திருவாரூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்பேரணியில் மாணவர்கள் போதைப்பொருள் அபாயமானது என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய நகர் பகுதி வழியாக நகராட்சி வரை சென்றனர்.