தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர் வருமா? காவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று கூடுகிறது

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம், வருகிற 28ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

By

Published : May 23, 2019, 7:34 AM IST

காவிரி ஒழுங்காற்று குழு

காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அமைத்தது. இவ்விரு அமைப்புகளுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் தங்கள் உறுப்பினர்களை நியமித்தனர்.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக 2018 டிசம்பர் 3ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கான காவிரி ஆணையமும், ஒழுங்காற்றுக் கூட்டமும் ஒருமுறை கூட நடத்தப்படவில்லை.

இதனிடையே, குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ஆம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் ஆணையம் இதைபற்றி எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில்தான் இன்று டெல்லியில் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.

மேலும் இக்கூட்டமானது, ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் என்றும் அதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சார்பில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details