அரியலூர்:விவசாயிகள் குறைதீர் கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, மின்சாரத்துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை தொடர்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.
அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 50 வரை வசூல் செய்யப்படுகிறது என்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்திடக் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, பயிர் காப்பீட்டுத் தொகை காலதாமதம் இன்றி விவசாயிகளுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர்கள், நீர் வழி தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்குப் பட்டா சிட்டா அடங்கல் போன்ற குறிப்புகள் தேவைப்படுகிறது எனக் கூறிய விவசாயிகள், மேற்கூறிய குறிப்புகளைப் பெறுவதற்குக் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் போன்றோர் லஞ்சம் கேட்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டுக்கொண்டனர்.