அரியலூர்:அரியலூர் மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ என்ற திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புறத் தொழில் முனைவோர்கள் (CSC VLEs) ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி, மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகின்றது.
மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ என்ற திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி, பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து, இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினைக் குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதே ஆகும்.