தமிழ்நாடு

tamil nadu

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

By

Published : Nov 21, 2019, 8:29 PM IST

அரியலூர்: சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் நடத்திய போராட்டத்தில் நான்கு பேர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ariyalur

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலை என்எச்-45சி யில் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை அகலப்படுத்தி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏற்கனவே இடம் அளக்கப்பட்டு, இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடு தொகையும் அந்த நிலத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீன்சுருட்டி அடுத்த சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் லாரி நிறுத்துமிடம் புதிதாக அமைக்கப்பட போவதாகவும், மீண்டும் இடம் அளந்து கையகப்படுத்த போவதாகவும் பொதுமக்களிடத்தில் தகவல் பரவியது. இதனால் சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் நியாயம் கேட்டு திடீரென சாலை அமைக்கும் அலுவலகம் முன்பாக அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் வந்து உரிய விளக்கம் தந்தால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று அம்மக்கள் தெரிவித்தனர்.

சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தப் போராட்டத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

இதற்கிடையில் பேச்சுவார்த்தை நடத்த அலுவலர்கள் வர தாமதமானதால் போராட்டக் குழுவிலிருந்த ராமதாஸ் அன்புமணி மணிபாரதி சக்திவேல் ஆகிய நான்கு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி உரிய முதலுதவி செய்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் மற்றும் என்எச்-45 தேசிய நெடுஞ்சாலை திட்ட ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் மகேஸ்வரன், கோவிந்தராஜுலு, மதியழகன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்கள் அளித்த மனுக்களை ஏற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மேலும் படிக்க: கோட்டாட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி நூதன போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details