அரபிக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருக்கும் மகா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அரியலுரில் தொடர் கனமழை - சாயும் மின்கம்பங்கள்
அரியலூர்: செந்துறை அருகே பலத்த காற்றுடன் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உயரழுத்த மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.
இதுபோன்று, அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே செந்துறை அருகே சென்னிவணம் கிராமத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றில் 4 உயரழுத்த மின் கம்பங்கள் சாய்ந்தன. நான்கு கூரை வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் சேதமடைந்தன. மேலும் ஒரு வீட்டின் பக்க சுவர் இடிந்து விழுந்தது.
இதனால், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கன்னியாகுமரியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.