சென்னை:ஆடவருக்கான 13வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், ஹரியானா, பஞ்சாப், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 28 மாநில அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதின.
இதன் லீக் சுற்று முடிவில் தமிழகம் உள்ளிட்ட 5 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், இத்தொடரின் 9வது நாளான நேற்று (நவ.25), கால் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - உத்தர பிரதேசம் அணிகள் மோதின.
விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்ட இப்போட்டியில், 27வது நிமிடத்தில் உத்தரப் பிரதேச அணியின் மணீஷ் சஹாணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னரைக் கோலாக மாற்றினர். இதனையடுத்து, 3வது நிமிடத்தில் உ.பி அணிக்கு கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை, சுனில் யாதவ் கோலாக மாற்ற, முதல் பாதி முடிவில் உபி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 3வது நிமிடத்தில், சுந்தரபாண்டி கோல் அடித்து தமிழ்நாடு அணியின் புள்ளிக் கணக்கினை தொடங்கி வைத்தார். பின்னர் 52 நிமிடத்தில் தமிழ்நாடு அணியின் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 2-2 என்ற சமநிலை எட்டியது.