தமிழ்நாடு

tamil nadu

தேசிய விளையாட்டு விருதுகள் பற்றிய முக்கிய விவரங்கள்

By

Published : Aug 29, 2020, 1:18 PM IST

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் முக்கிய விருதுகளைப் பற்றிய விவரங்கள்.

key-details-about-national-sports-awards-2020
key-details-about-national-sports-awards-2020

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்தியா சார்பாக விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தயான் சந்த் தான். ஏனெனில் தயான் சந்த் தலைமையிலான இந்திய அணி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. எனவே அவரை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய விளையாட்டு தினத்தன்று வாழ்வில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவரால் விருது வழங்கி கவுரவிக்கப்படும். கேல் ரத்னா, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான் சந்த் விருது இவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த விருது வழங்கும் விழா, இவ்வருடம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகிறது.

கேல் ரத்னா:

நான்கு வருடங்களாக தொடர்ந்து விளையாட்டில் சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும். இந்த விருதினைப் பெறுவோருக்கு பரிசுத்தொகையாக ஏழரை லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதினை தமிழ்நாடு வீரர் மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ஆகியோர் பெறுகின்றனர்.

அர்ஜுனா விருது:

சர்வதேசப் போட்டிகளில் நான்கு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும். தலைமைப் பண்பு, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப், விளையாட்டில் கடைபிடிக்கப்படும் ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விருதுகள் வழங்கப்படும். இந்த விருதினைப் பெறுவோருக்கு அர்ஜுனா சிலையுடன் பரிசுத்தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

துரோணாச்சார்யா விருது:

இந்த விருது, விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவுக்காக களமிறங்கும் வீரர்களை தயார் செய்யும் பயிற்சியாளர்களை கவுரவிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பெறுவோருக்கு விருதுடன் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

தயான் சந்த் விருது:

இந்த விருது விளையாட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகும் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருபவர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெறுவோருக்கும் விருதுடன் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

தேசிய விளையாட்டுத் தினத்தன்று மேற்கூறிய நான்கு விருதுகளைத் தவிர்த்து, பல்வேறு விருதுகளையும் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருது:

இந்தியாவில் சாகச விளையாட்டுகளுக்காக வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருது இதுவாகும். அர்ஜுனா விருதுக்கு இணையான இந்த விருது, நிலம், நீர், விமான சாகசம், வாழ்நாள் சாதனை என நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த விருது பெறும் வெற்றியாளர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

விருது பெறுபவர்களின் பட்டியல்

ராஷ்டிரிய கெல் புரோட்சஹான் புருஸ்கர்:

கார்ப்பரேட்டுகள், தன்னார்வ நிறுவனங்கள், விளையாட்டு மேம்படுத்துதல், விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆகியவற்றுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக விளையாட்டில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

மவுலானா அபுல் கலாம் ஆசாத் டிராபி:

1956-57ஆம் ஆண்டிலிருந்து கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் சிறப்பாக ஆடும் அணிக்கும், சர்வேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பல்கலைக்கழகங்களுக்கும் இவ்விருது வழங்கப்படும்.

இதையும் படிங்க:தேசிய விளையாட்டு தினம்: ஹாக்கி ஜாம்பவான் தாயன் சந்த்!

ABOUT THE AUTHOR

...view details