செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (மே 26) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரி, இந்தியாவின் பிரக்ஞானந்தா உடன் மோதினார். இப்போட்டியில், நான்கு ரேபிட் போட்டிகள் 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, நடந்த டை - பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெறறி பெற்றார். இதன்மூலம், பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மேலும், அவர் இறுதிப்போட்டியில் சீன வீரரும், உலகின் 2ஆம் நிலை வீரருமான டிங் லிரன் உடன் மோதுகிறார்.
முன்னதாக, இந்த தொடரில் ஐந்து முறை உலக சாம்பியனும், உலகின் நம்பர் 1 வீரருமான மாக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் தொடரிலும் கார்சலனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தார். இந்தியாவின் தற்போதைய இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவுக்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.
சதுரங்க சாம்பியன் போட்டியானது 9 தொடர்களாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நவம்பர் வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மூன்று தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது செஸ்ஸபிள் தொடர் நான்காவது தொடராகும்.
இதையும் படிங்க: Chessable Masters: தவறிழைத்த கார்ல்சன் - ஒரே நகர்வில் சாய்த்த பிரக்ஞானந்தா