போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ கால்பந்து அரங்கில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த வீரராகத் திகழ்கிறார். ஸ்போர்டிங் சி.பி (போர்ச்சுகல்), மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) உள்ளிட்ட பிரபல கால்பந்து கிளப் அணிகளில் விளையாடிய இவர் தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலியின் புகழ்பெற்ற யுவென்டஸ் அணிக்காகவும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார்.
இந்த நிலையில், டூரின் நகரில் நேற்று நடைபெற்ற சீரி ஏ கால்பந்து தொடரின் லீக் போட்டியில் யுவென்டஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் காக்லியரி அணியை வீழ்த்தியது. இதில், சிறப்பாக விளையாடிய ரொனால்டோ ஹாட்ரிக் கோல் (ஆட்டத்தின் 49, 67, 81ஆவது நிமிடங்களில் கோல்) அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.