தமிழ்நாடு

tamil nadu

பார்சிலோனாவுக்கு என்னதான் ஆச்சு!

By

Published : Nov 6, 2019, 11:00 PM IST

Updated : Nov 7, 2019, 10:20 AM IST

பந்தை அதிகம் பாஸ் செய்து எதிரணிகளை திணறிடித்து, கோல் மழை பொழிந்துவந்த பார்சிலோனா அணி தற்போது ஒரு கோல் அடிப்பதற்கே சிரமப்பட்டுவருகிறது.

Fc Barcelona

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா அணி, கால்பந்து கிளப் அணிகளில் தலைசிறந்த ஒன்றாக திகழ்ந்துவருகிறது. தலைசிறந்த வீரர் மெஸ்ஸி விளையாடும் இந்த அணிக்கு இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எதிரணி வீரர்கள் எத்தனை பேர் சூழ்ந்துகொண்டாலும் பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடி கோல் அடிப்பதுதான் பார்சிலோனாவின் ஸ்பெஷாலிட்டி. குறிப்பாக பார்சிலோனா அணி மிட் ஃபீல்டருக்கென பெயர் பெற்ற அணியாகத் திகழ்ந்தது.

மெஸ்ஸி, ஸாவி, இனியஸ்டா

இனியஸ்டா, புஸ்கட்ஸ், ஸாவி போன்ற மிட் ஃபீல்டர்கள் ஆட்டத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்வது மட்டுமின்றி, கோல் அடிக்கவும் உதவுவார்கள். பயிற்சியாளர் பெப் கார்டியாலாவின் கீழ் அந்த அணி 2008 முதல் 2012 வரை கோலோச்சி இருந்தது. 2015இல்தான் அந்த அணி இறுதியாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. அதன் பின் விளையாடிய நான்கு சீசனிலும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு ஒருமுறை கூட முன்னேறவில்லை.

2015 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பார்சிலோனா

2017இல் பயிற்சியாளர் வால்வர்டேவின் வருகைக்குப் பிறகு பார்சிலோனா அணி அட்டாக்கிங் முறையை கைவிட்டு டிஃபெண்டிங் ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறது. இதனால், அவ்வப்போது பார்சிலோனா அணியின் மிட் ஃபீல்டர்கள் மந்தமாக செயல்படுவதால், அந்த அணியின் ரசிகர்கள் #SackValverde என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துவருகின்றனர்.

கடந்த லா லிகா தொடரில் 38 போட்டிகளில் மூன்று தோல்விகளை மட்டுமே சந்தித்த பார்சிலோனா அணி இந்த சீசனில் விளையாடிய 11 போட்டிகளிலேயே மூன்று தோல்விகளை அடைந்துள்ளது. இதுஒருபக்கம் இருக்க, பார்சிலோனா அணி லா லிகா, சாம்பியன்ஸ் லீக் ஆகிய தொடர்களில் சொந்த மண்ணில் எடுபடும் அவர்களது வெற்றி என்பது அவே போட்டிகளில் (எதிரணி மண்ணில்) வெற்றிபெற மிகவும் தடுமாறுகிறது. இனியஸ்டா, ஸாவி ஆகியோர் ஓய்வு பெற்றபின் தற்போதைய டி ஜோங், ஆர்தர் மேலோ ஆகியோர் அவர்களது வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை.

பார்சிலோனா - சிலாவிய பிரெக்

அதேசமயம் புஸ்கட்ஸ், ரகிடிச் ஆகியோர் தங்களது பழைய ஃபார்மையும் வேகத்தையும் இழந்துவிட்டனர். இன்டர் மிலன், டார்ட்மண்ட், சிலாவியா பிரெக் ஆகிய அணிகளுடன் பார்சிலோனா அணி நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் குரூப் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய பார்சிலோனா இரண்டு வெற்றி, ஒரு டிரா என ஏழு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. அதில், சிலாவியா பிரெக் அணியுடனான அவே போட்டியில் பார்சிலோனா அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா மீண்டும் சிலாவியா பிரெக் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. சொந்த மண்ணில் கில்லியாக திகழ்ந்த அந்த அணி, நேற்றைய போட்டியில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

வால்வெர்டேவுடன் க்ரீஸ்மேன்

சிலாவியா பிரெக் அணியின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் பார்சிலோனா ஒவ்வொரு முறையும் பந்தை அவர்களிடம் தாரை வார்த்தது. இதுவரை 4-3-3 என்ற ஃபார்மேஷனில் விளையாடி வந்த அணி நேற்று புதியதாக 4-2-3-1 என்ற ஃபார்மேஷனில் விளையாடியது. சுவாரஸ் காயம் காரணமாக விலகியதால், க்ரீஸ்மேன் - ஆர்துரா விடால் - டெம்பளே ஃபார்வர்ட் வீரர்களாகவும், மெஸ்ஸி சென்டர் ஃபார்வர்ட் வரிசையிலும் விளையாடினர்.

left footed player க்ரீஸ்மேனை ரைட் விங்கில் விளையாட வைக்காமல் அவரை வால்வர்டே லெஃப்ட் விங் பொசிஷனிலேயே தொடர்ந்து விளையாட வைக்கிறார். நேற்றைய போட்டியிலும் அவர் அந்த பொசிஷனில் விளையாடியதால் மெஸ்ஸி, டெம்பளே உடன் இணைந்து பந்தை பாஸ் செய்து விளையாட சிரமப்பட்டார்.

க்ரீஸ்மேன்

மிட் ஃபீல்டிங்கில் சிறந்து விளங்கிய பார்சிலோனா அணி நேற்றைய போட்டியில் ஏராளமான தவறுகளை செய்தது. இதனால், பார்சிலோனா வீரர்களிடமிருந்து பந்தை எளிதில் கடத்திச்சென்று சிலாவியா பிரெக் வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். கோல்கீப்பர் டேர் ஸ்டேகன், டிஃபெண்டர்கள் பிக்யூ, லெங்லட் ஆகியோரின் முயற்சியால் சிலாவியா பிரெக் அணியால் கோல் அடிக்க இயலவில்லை.

முதல் பாதியில் பார்சிலோனாவின் லெஃப்ட் பேக் வீரர் ஜோர்டி ஆல்பாவிற்கு காயம் ஏற்பட்டதால், ரைட் பேக் பொசிஷனில் விளையாடிவந்த செமேடோ, லெஃப்ட் பேக் பொசிஷனுக்கு மாற்றப்பட்டார். டெம்பளேவை சப்ஸ்டிட்யூட் செய்து 17 வயது இளம் வீரர் அன்சூ ஃபாடியை (Anzu fati) வால்வெர்டே களமிறக்கினார். அன்சூ ஃபாட்டி வருகை தந்ததும் க்ரீஸ்மேன் லெஃப்ட் விங்கிலிருந்து ரைட் விங்கிற்கு மாறினார்.

இதனிடையே, மெஸ்ஸி வழக்கம் போல சிலாவியா பிரெக் வீரர்களை கடந்து கோல் அடிக்க சென்றார். அவர் க்ரீஸ்மேனுக்கு ஒரு பாஸ் அல்லது த்ரூ பால் செய்திருந்தால், க்ரீஸ்மேன் எளிதாக கோல் அடித்திருப்பார். ஆனால், இதை செய்யாமல் தானே கோல் அடிக்க வேண்டும் என மெஸ்ஸி முயற்சித்தார். அவர் அடித்த பந்து கோல்கம்பத்தின் மீது பட்டு விலகியதால் அவரது முயற்சி வீணானது. இதனால், மெஸ்ஸி - க்ரீஸ்மேனுக்கிடையே இன்னும் புரிதல் வரவில்லையோ என்ற கலக்கத்தில் பார்சிலோனா ரசிகர்கள் இருக்கின்றனர்.

அன்சூ ஃபாட்டி

அன்சூ ஃபாட்டியின் வருகைப்பின் மீண்டும் பார்சிலோனா அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், சிலாவியா பிரெக் அணியின் கோல்கீப்பர் லுகாஸ் மசோபஸ்ட் (Lucas Masopust) சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார். இதனிடையே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். ஆனால், ஆஃப் சைடினால் அந்த கோல் ரத்தானது.

பார்சிலோனா அணி அடித்த 14 ஷாட்டுகளில் ஆறு மட்டுமே ஆன் டார்கெட்டில் இருந்தது. பார்சிலோனாவிடம் 63 சதவீதம் பொசஷன் இருந்தபோதிலும் அவர்களால் மிட் ஃபீல்டிங்கில் பழைய மேஜிக்கை காட்ட முடியவில்லை. அதேசமயம், 37 சதவீதம் மட்டுமே பொசஷன் இருந்தும், பார்சிலோனா அணிக்கு சொந்த மண்ணில் தோல்வி பயத்தை காட்டியது சிலாவியா பிரெக்.

மெஸ்ஸியின் ஷாட்டை தடுத்த சிலாவிய பிரெக் கோல்கீப்பர்

இறுதியில் இப்போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது. பார்சிலோனா அணியில் சரியான சப்ஸ்டிட்யூட் வீரர்கள் இல்லாததும் நேற்றைய போட்டியில் அவர்கள் மோசமாக விளையாடியதற்கு மிகப்பெரிய காரணம். மிட் ஃபீல்டர் ஆர்தர் மேலோ, கார்லெஸ் அலினா, லெஃப் பேக் ஜூனியர் ஃபிர்போ ஆகியோரை பெஞ்சில் உட்கார வைத்தார் வால்வெர்டே.

இதுவரை நடப்பு சாம்பியன்ஸ் லீக் சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடிய பார்சிலோனா அணி இரண்டு வெற்றி, இரண்டு டிராவுடன் எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இனி பார்சிலோனா அணி வீரருக்கேற்ற பொசிஷனில் அவர்களை விளையாட வைப்பதிலும், மிட் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்தினாலும் மட்டுமே சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல முடியும்.

மெஸ்ஸி

ஏனெனில் மெஸ்ஸி, க்ரீஸ்மேன், டெம்பளே, டி ஜோங், புஸ்கட்ஸ் போன்ற பல சிறந்த வீரர்கள் இருந்தும் அவர்களது திறமை வால்வெர்டேவின் பயிற்சியின்கீழ் இதுபோன்ற சில போட்டிகளில் வீணாகுவதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பார்சிலோனா - டார்மண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி நவம்பர் 28ஆம் தேதி கேம்ப் நெள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Last Updated : Nov 7, 2019, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details