இந்தியாவில், தான் சார்ந்த துறைகளில் உள்ள தடைகளை தினந்தோறும் கடந்து முன்னேறி வரும் பெண்களுக்கு தனது அர்ஜுனா விருதை சமர்ப்பணம் செய்கிறேன் என்ற கண்ணிய பேச்சினால் அனைத்து தரப்புப் பெண்களும் கால்பந்து விளையாட்டில் தங்களது தடத்தைப் பதிக்க வழிவகுத்தவர் 'இந்திய அணியின் துர்கா' என அழைக்கப்பட்ட வீராங்கனை, ஒய்னம் பெம்பெம் தேவி.
இந்தியாவிலுள்ள மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரத்தில் 1980ஆம் ஆண்டு பிறந்த ஒய்னம் பெம்பெம் தேவி, கால்பந்து விளையாட்டு ஆண்களின் விளையாட்டாக இருந்த காலத்தில் பெண்களாலும் இவ்விளையாட்டில் சாதிக்க முடியும் என நிரூபித்துக் காட்டிவர். அதன் விளைவாக தனது 11ஆம் வயதிலேயே தான் பிறந்த மணிப்பூர் மாநிலத்தின் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் கால்பந்து பிரிவில் விளையாடி, தனது பயணத்தைத் தொடங்கிய தேவி, அன்றிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை, தனது மாநில அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக வலம் வந்தார்.
பின் தனது 13ஆவது வயதில் மணிப்பூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தேவி, அடுத்த இரண்டே ஆண்டுகளில் தேசிய அணிக்காக விளையாடத்தொடங்கினார். ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்துத் தொடருக்கான, இந்திய அணியில் தேர்வாகி அசத்தினார்.
பின் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்திய மகளிர் அணி நேபாள அணியைத் தவிர ஜப்பான், வடகொரியா, உஸ்பேகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் படுதோல்வியைத் தழுவியிருந்தது.
1997ஆம் ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்திய அணி ஜெர்மனிக்குச் சென்று ஒரு மாத கால பயிற்சியை மேற்கொண்டது. அங்கு அவர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சிகொடுத்த பின் ஜெர்மனி அணிகளுடன் இந்திய அணி மோதியது. அந்தப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி தங்களது திறமையை நிரூபித்தது.
1997ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கானத் தொடரில் ஜப்பானிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் குவாம் அணியுடனான போட்டில் 10-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் 2003ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்படத் தொடங்கிய தேவி 2010, 2012, 2014 ஆகிய மூன்று தெற்காசிய கால்பந்து கோப்பையை இந்திய அணிக்காக தலைமை தாங்கி, பெற்றுத்தந்தார்.