தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2019, 12:12 AM IST

ETV Bharat / sports

2019 Football: மெஸ்ஸி, இந்தியன் ஃபிபா தாத்தா, என ரசிகர்களின் உணர்வுகள் நிரம்பிய தருணங்கள்!

2019ஆம் ஆண்டில் கால்பந்து போட்டிகளில் ஒரு சிலருக்கு நிகழ்ந்த சோகம், மகிழ்ச்சி, வெற்றி, சாதனை ஆகியவற்றின் குறித்து சிறு அலசல்

2019 Best Football Moments
2019 Best Football Moments

ஐஎஸ்எல்: ஈசாலா கப் நம்தே... பெங்களூரு சாம்பியன்ஸ்!

பெங்களூரு

ஈசாலா கப் நமதே என கூறிவரும் பெங்களூரு அணி ரசிகர்கள் கொண்டாடுவதற்கு கிடைத்த ஒரே கோப்பை ஐஎஸ்எல் மட்டுமே. 2018-19 சீசன்களுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்.சி கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஐ லீக்: சென்னை சிட்டியின் முதல் கோப்பை

சென்னை சிட்டி எஃப்சி

இந்தியாவிலுள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான 2018-19 சீசனுக்கான ஐ லீக் சாம்பியன் பட்டத்தை சென்னை சிட்டி எஃப்சி அணி முதல்முறையாக வென்று அசத்தியது. ஆனால், இந்த வெற்றியை ருசிக்க சென்னை அணிக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் நிதி நெருக்கடியால் அவதிப்பட்டுவந்ததால், சென்னை சிட்டி எஃப்சி அணிக்கு பரிசு தொகை ரூ. 1 கோடியை 100 நாட்களுக்கு பின்னரே வழங்கியது.

ஃபிஃபா கவுன்சில் உறுப்பினாராக இந்தியர் நியமனம்!

பிரஃபுல் படேல்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா கவுன்சில் உறுப்பினாராக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஏஎஃப்சி கால்பந்து பொதுக்குழுக் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், ஃபிஃபா கால்பந்து கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான வாக்கெடுப்பில் பிரஃபுல் படேல் 46 வாக்குகளில் 38 வாக்குகளைப் பெற்று உறுப்பினர் பொறுப்புக்கு தேர்வானார்.

இதன்மூலம், ஃபிஃபா கவுன்சில் உறுப்பினராக இந்தியர் ஒருவர் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறையாகும். ஆசிய கண்டத்தில் இருந்து ஃபிஃபா கவுன்சில் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினர்களில் பிரஃபுல் படேலும் ஒருவர்.

கடலில் கரைந்த கால்பந்து வீரரின் பயணம்

2019ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா உயிரிழந்தது கால்பந்து ரசிகர்களை கண்கலங்கச் செய்தது. ஸ்ட்ரைக்கராக பிரான்ஸின் நான்டிஸ் கிளப் அணிக்காக விளையாடி வந்த இவரை வேல்ஸின் கார்டிஃப் அணி 17 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்தது. தனது புதிய பயணத்தை நோக்கி கார்டிஃப் செல்வதற்காக நான்டிஸிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி பைலெட்டுடன் சென்ற இவரது விமானம் திடீரென மாயமானது.

சலா

விமானம் மாயமாவதற்கு முன் எனக்கு பயமாக இருக்கிறது என வாட்ஸ்அப்பில் தனது தந்தைக்கு அவர் ஆடியோ மெசேஷ் அனுப்பியுள்ளார். இவரைக் கண்டுபிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி இவரது உடலை கடற்படையினர் isle of portland தீவில் மீட்டெடுத்தனர். விமானத்தில் கார்பன் மோனாக்சைடு வெளியேறியாதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

கடலில் கரைந்த கால்பந்து வீரரின் பயணம்

சலாவின் உடல் கிடைத்தபோதிலும், 57 வயதான விமானி டேவிட் இபோட்சனின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. எமிலியானோ சலாவின் மரணம் பல கோடி கால்பந்து ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அவர் உயிர்பிரிந்து மூன்று மாதங்களுக்குப் பின் அவரது தந்தை ஹொராசியோ சலா மாரடைப்பு காரணத்தால் உயிரிழந்தார். எமிலியானோ சலாவின் மரணத்திற்கு இன்றளவும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

சொந்த மண்ணில் இரண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில்!

கோப்பா அமெரிக்கா:

கோப்பா அமெரிக்கா வென்ற பிரேசில்

கடந்த ஆண்டு சர்வதேச கால்பந்து தொடரை பொறுத்தவரையில் பிரேசில் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. முதலில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்கு பின் தங்களின் 9ஆவது கோப்பா அமெரிக்கா பட்டத்தை ருசித்தது. இந்தத் தொடர் பிரேசில் அணிக்காகவே செட் செய்யப்பட்டது என அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி பேசியது சர்ச்சையானது.

17 வயது உலகக்கோப்பை:

சீனியர்கள் சாதித்ததைப் போலவே ஜூனியர் அணியும் தங்களது சொந்த மண்ணில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா உலகக் கோப்பை தொடரில் அசத்தியது. காமாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மெக்சிகோ அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு கோல் பின்தங்கிய நிலையிலிருந்த பிரேசில் அணி, ஆட்டம் முடிய ஆறு நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி நான்காவது முறையாக இந்தத் தொடரை வென்றது.

17 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற பிரேசில்

2014இல் ஃபிபா உலகக் கோப்பையை நழுவ விட்டதை கடந்த ஆண்டில் கோப்பா அமெரிக்கா, 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை என இரண்டு கோப்பைகளை வென்று சரிசெய்து கொண்டது பிரேசில் அணி

ஒருபக்கம் தடை... மறுபக்கம் ஹாட்ரிக் சிக்சர்! மெஸ்ஸி ஸ்ட்ரைக்ஸ்!

கால்பந்து அரங்கில் தலைசிறந்த வீரராக திகழும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸிக்கு 2019ஆம் ஆண்டு சர்ச்சைகள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது.

14 ஆண்டுகளுக்குப் பின் ரெட் கார்ட் வாங்கிய மெஸ்ஸி

முதலில் பிரேசிலில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் அணிக்காக மேட்ச் ஃபிக்ஸ் செய்யப்பட்டதாக மெஸ்ஸி தெரிவித்தார். அவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி பிரேசில் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது.

மெஸ்ஸி

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் சிலி அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர், 14 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது ரெட் கார்ட் பெற்றார். இப்போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்ற பின்தான் மேற்கூறிய கருத்தை அவர் தெரிவித்தார். மெஸ்ஸியின் இந்தக் கருத்துக்கு கோப்பா அமெரிக்கா கால்பந்து சம்மேளனம் அவருக்கு மூன்று மாதம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்தது.

விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட மெஸ்ஸி

ஒருபக்கம் சர்வதேச போட்டிகளில் தடை விதிக்கப்பட்டாலும், மறுமுனையில் 2018-19 லீக் போட்டியில் அதிக கோல் அடித்ததற்காக ‘கோல்டன் பூட் விருது, பின் FIFAவின் சிறந்த வீரருக்கான விருது, பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் வழங்கும் பாலன் டி ஆர் உள்ளிட்ட மூன்று உயிரிய விருதுகளையும் ஆறாவது முறையாக வென்ற ஒரே வீரர் என்ற சாதனை படைத்தார்.

பாலன் டி ஆர் விருதுகளுடன் மெஸ்ஸி

இதுமட்டுமின்றி 2019ஆம் ஆண்டில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிக்காக 50 கோல் அடித்து, தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ஒரே ஆண்டில் 50 கோல் அடித்த முதல் வீரர் என்ற மற்றொரு சாதனையையும் படைத்தார்.

இது லிவர்பூல் ராஜ்ஜியம்!

2019ஆம் ஆண்டு தனிப்பட்ட வீரராக மெஸ்ஸிக்கு சிறந்த ஆண்டு என்றால், அணியாக பார்க்கும்போது இங்கிலாந்தின் லிவர்பூல் அணிக்கே ஆகச் சிறந்த ஆண்டாக அமைந்தது.

ஆறாவது சாம்பியன்ஸ் லீக் கோப்பை:

முதலில் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜ்ஜியம் நடத்திவந்த ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளின் ஆதிக்கத்திற்கு லிவர்பூல் அணி முற்றுப்புள்ளி வைத்தது.

லிவர்பூல்

கம்பேக்:

பார்சிலோனா அணிக்கு எதிராக முதல் அரையிறுதிப் போட்டியில் லிவர்பூல் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, பின் தனது சொந்த மண்ணில் 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதெல்லாமே சாம்பியன்ஸ் லீக்கின் சிறந்த கம்பேக் போட்டியாக பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இங்லிஷ் ப்ரீமியர் லீக் தொடரின் மற்றொரு அண்டர்டாக் அணியான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிராக மாட்ரிட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 14 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. லிவர்பூல் அணி வெல்லும் ஆறாவது சாம்பியன்ஸ் லீக் கோப்பை இதுவாகும்.

ஐந்தாவது யூரோ கோப்பை:

இதையடுத்து, ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற லிவர்பூல் அணிக்கும், ஐரோப்பா யூரோ கோப்பையை வென்ற செல்சி அணிக்கும் இடையே நடைபெற்ற சூப்பர் கோப்பை தொடர் இஸ்தான்புலில் நடைபெற்றது.

லிவர்பூல் அணி 14 ஆண்டுகளுக்கு முன் 2004இல் இங்குதான் மிலன் அணிக்கு எதிராக பெனால்டி முறையில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதை போலவே, இம்முறையும் பெனால்டி முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி ஐந்தாவது சூப்பர் கோப்பையை வென்றது.

முதல் ஃபிபா கிளப் உலகக் கோப்பை:

லிவர்பூல்

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் போல, ஒவ்வொரு கண்டங்களிலும் நடைபெறும் கால்பந்து லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு இடையே நடைபெறுவதுதான் ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடராகும். தோஹாவில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணி ஜெர்மனியின் பிளமிங்கோ அணியை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் லிவர்பூல் வீரர் ராபார்டோ ஃபிர்மினோ ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கோல் அடிக்க, லிவர்பூல் அணி தனது முதல் ஃபிபா கிளப் உலகக் கோப்பையை வென்றது.

நடப்பு இங்லிஷ் ப்ரீமியர் லீக் சீசனில் லிவர்பூல் அணி ஒரு தோல்வியையும் சந்திக்காமல் சூப்பர் ஃபார்மில் உள்ளது. 18 போட்டிகளில் 17 வெற்றி, ஒரு டிரா என 52 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால், சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா சூப்பர் கோப்பை, ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடர்களை போன்று 30 ஆண்டுகளுக்குப் பின் இங்லிஷ் ப்ரீமியர் லீக் பட்டத்தையும் வெல்லுமா என்பதற்கு 2020இல் பதில் தெரியும்

பெண்கள் கால்பந்து போட்டி: தொடரும் அமெரிக்காவின் ஆதிக்கம்

ஐரோப்பா நாடுகளே கால்பந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினாலும், மகளிருக்கான கால்பந்து போட்டிகளில் அமெரிக்காவை மிஞ்ச இங்கு எவரும் இல்லை என்பதை மீண்டும் அந்த அணி 2019ஆம் ஆண்டு நிரூபித்துள்ளது.

அமெரிக்கா

பிரான்ஸில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. இதன்மூலம், நான்கு உலகக் கோப்பைகளை வென்று அதிக உலகக் கோப்பை தொடரை வென்ற அணி என்ற சாதனையையும் அமெரிக்கா படைத்துள்ளது.

ஃபிபா தாத்தா மறைவு: முடிவுக்கு வந்த கால்பந்து ரசிகரின் 40 ஆண்டு பயணம்!

கொல்கத்தாவைச் சேர்ந்த வயதான தம்பதி பன்னலால் சாட்டர்ஜி - சைதாலி இருவரும் கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள். கால்பந்து போட்டியில் கொண்ட ஈர்ப்பினால் தொடர்ந்து 10 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளையும் நேரில் கண்டு பார்த்து ரசித்துள்ளனர். 1982 ஸ்பெயினில் தொடங்கி 2018 ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் என 40 வருடங்கள் கால்கள் ஓயாமல் பயணம் செய்து பல மறக்க முடியாத அனுபவங்களை பெற்றனர்.

86 வயதான பன்னலால் சாட்டர்ஜி டிசம்பர் மாதத்தில் தனது வீட்டின் பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி 17ஆம் தேதி உயிரிழந்தார். சுமார் 40 ஆண்டுகள் கால்பந்து விளையாட்டின் மீது அதீத காதலை வெளிப்படுத்தி வந்த பன்னலால் சாட்டர்ஜியின் மறைவு, இந்தியர்கள் மட்டுமின்றி கால்பந்து விளையாட்டை ரசிக்கும் உலக ரசகிர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:Badminton 2019: பி.வி. சிந்து முதல் மானஸி ஜோஷிவரை சாதனை படைத்த இந்தியர்கள்

ABOUT THE AUTHOR

...view details