இந்தியன் பிரீமியர் லீக்கின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சென்னையில் மோதுகின்றன. இதற்காக இரண்டு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது பெங்களூரு அணியை பொறுத்தவரை பெரும் சறுக்கலாக அமைந்துள்ளது. இந்நிலையில், பெங்களூரு அணியின் ஸ்லோ கட்டரான டேனியல் சாம்ஸுக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், டேனியல் சாம்ஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சென்னை வந்த டேனியல் சாம்ஸுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது. அவருக்கு கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து டேனியல் சாம்ஸின் உடல் நிலையைக் கண்காணி்த்து வருகின்றனர்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய டேனியல் சாம்ஸ், இந்தாண்டு பெங்களூரு அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.