12-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 23ஆம் தேதி தொடங்கியது. வழக்கம்போல் இந்த ஐபிஎல் தொடரும் பல திருப்புமுனைகளுடன் திருவிழாவாய் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விராட் கோலி, கைஃப் உள்ளிட்ட வீரர்கள் நடுவரின் தரம் குறித்து கேள்வி எழுப்பி சர்ச்சைகளும் தொடங்கியுள்ளது. அதில் மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கடைசி பந்தில் மலிங்கா வீசிய நோ-பால் அம்பயரின் கவனக்குறைவால் கவனிக்கப்படாமல் விட, பெங்களூரு அணி தோற்பதற்கு முக்கியக் காரணமாய் அமைந்தது.
இதுகுறித்து, செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி வெளிப்படையாகவே விமர்சனம் செய்திருந்தார். இதனையடுத்து, மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் அஷ்வின் ஒரே ஓவரில் ஏழு பந்துகளை வீச, ஏழாவது பந்து பவுண்டரி அடிக்கப்பட்டது.
மும்பை-பெங்களூரு போட்டியின்போது ஏற்பட்ட நோ-பால் சர்ச்சை பின்னர், டெல்லி-பஞ்சாப் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில், ஃபீல்டிங்கில் சொதப்பும் சர்ஃப்ராஸ் கானுக்கு பதிலாக கருண் நாயர் 20 ஓவர்களும் நடுவரின் கவனக்குறைவால் ஃபீல்டிங் செய்தது குறித்து டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ரசிகர்களும், நிர்வாகத்தினரும் நடுவர்கள் கவனக்குறைவாக செயல்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் பார்க்கப்படும் கிரிக்கெட் தொடரில் நடுவர்கள் இவ்வாறு கவனக்குறைவாக செயல்படுவது கிரிக்கெட்டின் தரத்தை குறைத்துவிடும் என்றும் சமூகவலைதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.