பெங்களூருவில் நடைபெறவுள்ள இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
பெங்களூரு அணி விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால், பரிதாபமான நிலையில் உள்ளது. சொந்த மண்ணில் களமிறங்குவதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், பெங்களூரு அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் கோலி உட்பட யாரும் இதுவரை சிறந்த பங்களிப்பை அளிக்காதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் சாஹல் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில், தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று வலிமையான அணியாக வலம் வருகிறது. அந்த அணியின் அதிரடி வீரர் ரஸல் ஆட்டத்தின் போக்கினை எந்த நிலையிலும் மாற்றும் வகையில் ஆடிவருவது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது.
இந்த போட்டியில் பெங்களூரு அணியில், ஹெட்மயருக்கு பதிலாக டிம் செளதி மற்றும் உமேஷ் யாதவிற்கு பதிலாக பவன் நெகி களமிறங்கவுள்ளனர்.