தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

SA vs IND 2nd Test | தாக்கூர் தாண்டவம்; புரட்டி எடுத்த புஜாரா - இந்தியா முன்னிலை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்கள் இழப்பிற்கு 85 ரன்களை எடுத்து, 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, ஷர்துல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை மிரள வைத்தார்.

By

Published : Jan 5, 2022, 9:41 AM IST

'Tiger' Roars in Bull Ring: Shardul takes 7-for to bring India back in game  visitors 85/2 at stumps  SA vs IND 2nd Test  SA vs IND 2nd Test Day 2 Scorecard
SA vs IND 2nd Test

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக விளங்கிய செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே டெஸ்ட்) இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

முதல் நாள் ஆட்டம்

இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 3) தொடங்கியது. முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி இப்போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார்.

தென்னாப்பிரிக்கா அணியில் டி காக் திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றதால் விக்கெட் கீப்பராக அறிமுக வீரர் கையில் வெரியைன் களமிறக்கப்பட்டார். முல்டர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் ஓலிவர் அணியில் சேர்க்கப்பட்டார்.

எல்கர் - பீட்டர்சன் அபாரம்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து, முதல் இன்னிங்ஸில் 202 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில், 35/1 என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் (ஜனவரி 4) நடைபெற்றது. கேப்டன் டீன் எல்கர் 11 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர். மேலும், முதல் நாளில் சிராஜுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் இரண்டாம் நாளில் பந்து வீசுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. வழக்கத்தைப்போல் இல்லையென்றாலும் அவர் ஒரளவுக்கு பந்து வீசினார்.

ஷாக்... ஷாக்... ஷர்துல்

எல்கர், பீட்டர்சன் ஜோடி நேற்று ஏறத்தாழ 20 ஓவர்களுக்கு தாக்குப்பிடித்தது. எல்கர் அனைத்து பந்துகளையும் நிதானமாக எதிர்கொள்ள, பீட்டர்சனோ பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை வெளுத்துவாங்கி ரன்களை குவித்துக்கொண்டிருந்தார்.

நீண்டநேரம் கழித்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச வந்தார். முதல் ஓவரை சமாளித்த தென்னாப்பிரிக்க ஜோடி, அவரின் இரண்டாவது ஓவரில் உடைந்தது. தாக்கூர் வீசிய 39ஆவது ஓவரில் கேப்டன் எல்கர் 28 ரன்களில் பந்திடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.

தாக்கூரின் அடுத்தடுத்த ஓவர்களில் முறையே (43ஆவது ஓவர், 45ஆவது ஓவர் ) அரைசதம் கடந்திருந்த பீட்டர்சன் 62 ரன்களிலும், ரஸ்ஸி வான் டேர் டஸ்ஸன் 1 ரன்னிலும் வீழந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர், தென்னாப்பிரிக்கா 102 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஷர்துல் 6/71

இதன்பின்னர், டெம்பா பவுமா, வெர்ரையின் ஜோடி ஐந்தாம் விக்கெட் பார்னர்ஷிப்புக்கு 60 ரன்களைச் சேர்த்தது. இந்த ஜோடியையும் தாக்கூர் தான் பிரித்தார்.

65ஆவது ஓவரில் வெர்ரையினை 21 ரன்களிலும், 67ஆவது ஓவரில் பவுமாவை 51 ரன்களிலும் தாக்கூர் தூக்கினார். இதற்கடுத்த ஓவரில், ரபாடா ஷமியிடம் டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இதன்பின்னர், சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்த ஜன்சென், மகாராஜ் ஜோடியை இம்முறை பும்ரா உடைத்தார். மகாராஜ் 21 ரன்களில் பும்ராவிடம் ஸ்டமெப்பை பறிகொடுக்க, ஜன்சென், இங்கிடி ஆகியோர் தாக்கூரிடம் தங்களது விக்கெட்டை இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்களை எடுத்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஷர்தல் தாக்கூர் 61 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டை கைப்பற்றி, தென்னாப்பிரிக்காவில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஷர்துல் பெற்றார்.

பொங்கி எழுந்த புஜாரா

இதன்பின்னர், தொடக்க ஜோடியாக ராகுல் - அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். கடந்த இன்னிங்ஸில் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்த ராகுல், இம்முறை 8 ரன்களில் ஜன்சென்னிடம் வீழ்ந்தார். ஐந்து பவுண்டரிகளை அடித்து அதிரடி காட்டி வந்த மயாங்க் அகர்வால், ஓலிவரிடம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இந்தியா வெறும் 17 ரன்களில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான சூழலில் இருந்தது. அப்போது களமிறங்கிய புஜாரா, ரஹானே ஆகியோர் அரணாக இருந்து இந்திய அணிக்கு ரன்களை குவித்தனர்.

அதில், ரஹானே நிதானித்து ஆட புஜாரா புயலைக் கிளப்பி பவுண்டரிகளாக பறக்கவிட்டார். இதன்மூலம், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வலுப்பெறுமா இந்தியா?

புஜாரா, ரஹானே ஆகியோர் நேற்று போல் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியா வலுவான நிலை நோக்கி நகரும்.

மேலும் இன்னும் மூன்று நாள்கள் ஆட்டம் மீதம் இருப்பதால், கண்டிப்பாக நான்கு செஷன்களாவது (ஒன்றரை நாள்) இந்தியா பேட்டிங் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜனவரி 5) இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும்.

ABOUT THE AUTHOR

...view details