புனே: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 26) புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை களமிறங்கியது. கடந்த போட்டியில் சதத்தை நெருங்கிய தவான், இன்று 4 ரன்களிலேயே ரீஸ் டோப்லி பந்தில் நடையைக் கட்டினார். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த ரோஹித் 25 (25) சாம் கரன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
இந்தியா 37 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கோலி - ராகுல் இணை, ரன் வேகத்தைச் சீராக அதிகரித்தது. இங்கிலாந்து கேப்டன் பட்லர், ரஷித், மொயின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்களையும் அடுத்தடுத்து பயன்படுத்தி இந்திய அணியை அச்சுறுத்த, கோலியும் ராகுலும் நிதானமாக சுழலை எதிர்கொண்டு ஆடினர். மேலும், கோலி 35 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷித் பந்தில் பட்லர் கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார்.
கோலி 61 பந்துகளிலும், ராகுல் 66 பந்துகளிலும் அரை சதத்தைக் கடந்தனர். இப்போட்டியில், மூன்றாவது வீரராக களமிறங்கி குறைந்த (190) இன்னிங்ஸில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
அதிரடி காட்டிவந்த இந்த ஜோடியை ரஷித் உடைத்தார். விராட் கோலி 66 (79) ரன்களில் பட்லரிடம் கேட்ச்சாகி பெவிலியன் திரும்ப, அடுத்ததாக வந்த ரிஷப் பந்த் அதிரடி காட்டினார்.