தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 10, 2019, 7:54 PM IST

ETV Bharat / sports

மிஸ் யூ ஜெர்சி நம்பர் 12!

இந்திய அணியில் நடுவரிசையின் நம்பிக்கையாக வலம் வந்த யுவராஜ் சிங்கின் 19 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இனி யுவியின் புல் ஷாட், கவர் ட்ரைவ், லெக் ப்ளிக் ஷாட், ப்ளாட் சிக்ஸ், ஸ்ட்ரையிட் ட்ரைவ் என பல ஸ்டைலான ஷாட்களை ஹைலைட்ஸ்களில் மட்டுமே பார்க்கப்போகிறோம். யுவி...யுவி...யுவி... இந்த குரல்கள் இனி மைதானத்தில் கேட்கப் போவதில்லை. இதோ யுவராஜ் சிங்கின் சில நாஸ்டால்ஜிக் மொமண்ட்கள்:

நம்பர்

சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பகிர்ந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து நாசர் பதிவிட்ட வரிகள் இவை:

இவர்கள் இருவர் ஆடிய ஆட்டம் இன்றும் என்னை விடாமல் துரத்தி வரும் கொடுங்கனவு எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப். மற்றொருவர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் எந்தவித பந்துவீச்சாளர்களாலும் அசைக்க முடியாத அசாத்திய வீரர் யுவராஜ் சிங். ஜெர்சி நம்பர் 12.

சரியாக 2002... இந்தியா அணியை மும்பையில் வைத்து இங்கிலாந்து அணி வென்றது. இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப், ஜெர்சியைக் கழற்றி சுற்றியபடி மைதானத்தை வலம் வந்து தங்கள் வெற்றியைக் கொண்டாடினார். இந்திய ரசிகர்கள் கோபத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறுவார்கள். அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி உட்பட அனைத்து வீரர்களும் விரக்தியில் இருப்பார்கள்.

யுவராஜ் சிங் - கங்குலி

பின்னர் இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும். இங்கிலாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் மோதிய முத்தரப்பு தொடர் அது, நம்மை சொந்த மண்ணில் வீழ்த்திய இங்கிலாந்தை கிரிக்கெட்டின் 'மெக்கா' என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து வெல்வதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கங்கணம் கட்டிக்கொண்டு கங்குலி களமிறங்கி வெளுத்து வாங்குவார். ஆனால் துரதிஷ்டவசமாக கங்குலி ஆட்டமிழக்க, நடுவரிசை ஆட்டம் காணும். ஆனால் அங்கே இரண்டு இளம் காளைகள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை பொளந்துகட்டுவார்கள். இந்தியாவில் நம் வீரர்களை விரக்தி நிலைக்குத் தள்ளிய இங்கிலாந்து அணி அன்று தன் சொந்த மண்ணில் நம் வீரர்களால் விரக்தியடைந்தது. இன்றும் கங்குலி என்றால் லார்ட்ஸ் மைதானம் நியாபகம் வருவதற்கு அப்போட்டிதான் காரணம். அந்த வெற்றிக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங்

அங்கிருந்துதான் இந்த இளம் வீரரின் பயணம் ரசிகர்களின் கண்களில் படத் தொடங்கியது. அந்தப் பயணத்தில் சிறிது முன்சென்று பார்த்தால் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் 13 வயதில் இடம்பிடித்தது, அதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே முதல்தரப் போட்டிகளில் செய்த சாதனைகள், ரஞ்சி டிராபி தொடர்களில் அட்டகாசப்படுத்தி இந்திய அணிக்குள் மிக வேகமாக இடம்பிடித்தது என பல சாதனைகள் கண்ணில் பட்டன. ஆனால் இந்திய அணிக்குள் மிக வேகமாக வந்த யுவராஜ் சிங்கிற்கு நிரந்தர இடம் கிடைக்க சில போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. போராட்டங்கள் என்றால் யுவி.க்கு கசக்கவா செய்யும். தனது வாழ்க்கைக்காக போராடியவனுக்கு தனக்கு பிடித்த விளையாட்டுக்காக போராட கற்றுத்தர வேண்டுமா?

யுவராஜ் சிங்

2000ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்தது முதல் சரியாக விளையாட முடியாத யுவராஜ் சிங்கிற்கு 2002ஆம் ஆண்டுதான் சிறப்பாக அமைந்தது. இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி நாட் வெஸ்ட் தொடரை கங்குலி தலைமையில் கைப்பற்றியதையடுத்து, இந்திய அணியின் நடுவரிசையில் தவிர்க்க முடியாத வீரர் ஆனார் யுவராஜ் சிங்.

பேட்டிங்கில் மட்டுமல்ல இந்திய அணியின் ஃபீல்டிங்கிற்கும் அவரால் புதிய ரத்தம் பாய்ந்தது. ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என அனைத்து அணிகளிலும் சிறந்த ஃபீல்டர்கள் இருந்த நிலையில், இந்திய அணிக்கு ஜாண்டி ரோட்ஸ் போல் ஒரு ஃபீல்டர் கிடைக்க மாட்டாரா என ஏங்கிய இந்திய ரசிகர்களுக்கு வரமாய் வந்தவர் யுவராஜ் சிங். பாய்ண்ட் திசையில் யுவராஜ் நின்றால், பவுண்டரி என்ன சிங்கிள் ஓடிப் பார் என எதிரணியினரை சவாலுக்கு அழைக்கலாம். ஜல்லிக்கட்டு காளையாய் பாய்ந்து சென்று எங்கேயோ செல்லும் பந்துகளை பிடித்து நேராக ஸ்டெம்புகளை தெறிக்க விடுவதில் யுவராஜ் சிங் என்றும் 'கில்லி'.

யுவராஜ் சிங்

2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுவிடும் என இந்திய ரசிகர்கள் நம்பியது சச்சின், கங்குலி இருந்ததால் மட்டுமல்ல, அங்கே நடுவரிசை வீரர்களான ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், முகமது கைஃப் ஆகியோர் சரியாக அமைந்துள்ளார்கள் என்பதும் ஒரு காரணம். ஆனால் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது அந்த 22 வயது இளைஞனின் மனதில் ஆறாத வடுவாக மாறியது.

அங்கிருந்து ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளை புரட்டி எடுத்தது, தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய மண்ணில் வைத்து தண்ணிகாட்டியது என யுவராஜின் மாயாஜாலங்கள் ஏராளம். அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு சதம் விளாசியதெல்லாம் இந்திய அணியின் நாஸ்டால்ஜிக் மொமண்ட்களில் ஒன்று. அதிலும் உற்ற நண்பன் தோனியுடன் பாகிஸ்தானை அடித்து துவம்சம் செய்ததெல்லாம் அதிரடியின் உச்சகட்டம்.

யுவராஜ் சிங் - தோனி

ஆனால் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய அணிக்கு மிகப்பெரிய இடியாய் அமைந்தது. மிகப்பெரிய தோல்வி. ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றம். இனி கிரிக்கெட்டே பார்க்கப் போவதில்லை என ரசிகர்கள் முடிவெடுத்த தருணம்.

யுவராஜ் சிங் - பிராட்

எந்த உலகக்கோப்பையில் தோல்வியடைந்து ரசிகர்களை ஏமாற்றினோமோ அதே உலகக்கோப்பையால்தான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும் என களமிறங்குகிறார் யுவி. ஆனால் ஒரு சிறு மாற்றம். இது டி20 உலகக்கோப்பை. தென்னாப்பிரிக்காவில் புதிய கேப்டன் தோனியுடன், துணை கேப்டனாக யுவராஜ் சிங் களமிறங்கினார். இந்திய அணி இளம் வீரர்களுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுகிறது. வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆட வேண்டும். இந்திய அணியின் பேட்டிங்கின்போது பிளிண்டாஃப் யுவராஜ் சிங்கை வம்புக்கு இழுக்க, அடுத்த ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பிராட்டின் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள். என்றும் டி20 கிரிக்கெட்டின் மகத்தான தருணம் அதுதான். ஒரு கூடுதல் விஷயம் என்னவென்றால், பிராடை பார்க்கும்போதெல்லாம் இந்திய ரசிகர்களுக்கு அந்த சம்பவம்தான் நினைவுக்கு வரும்.

6 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட யுவராஜ் சிங்

அந்தத் தருணத்தில் இருந்து 'இவன் வேற மாதிரி' என பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். யுவியின் மேஜிக்கால் இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சீபி சீரியஸில் தோனியின் தளபதியாக மாறினார். பின்னர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்தியது. தனது ஹீரோ சச்சினின் மும்பை அணியை வீழ்த்த ரன்அவுட் செய்ய பாய்ந்ததைப் பார்த்து சச்சினே மிரண்டு போயிருப்பார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர். சச்சினின் கடைசி உலகக்கோப்பைத் தொடர் இதுதான் என உலகமே பேசியது. இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை என்பதால் மீடியாக்கள் கூடுதலாக பேசினர். முதன்முறையாக சச்சினுக்காக உலகக்கோப்பையை நாங்கள் நிச்சயம் வெல்வோம் என உலகுக்கே தெரியும்படி யுவராஜ் கூறினார். உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியது. பேச்சில் மட்டுமல்ல செயலிலும் நான் புலி என்பதற்கு தகுந்தாற்போல் அனைத்து அணிகளோடும் வெறிகொண்டு விளையாடினார். இந்திய அணியை வெல்ல வேண்டுமென்றால் என்னைத் தாண்டி வென்று காட்டு பார்க்கலாம் என அனைத்து அணிகளையும் வம்புக்கு இழுத்து அடித்து அனுப்பினார். இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது சிங்கத்தின் வாலைப் பிடித்துக்கொண்டு குடும்பம் நடத்துவதற்கு சமம்.

யுவராஜ் சிங்

ஆனால் இந்திய அணி முழு முயற்சியுடன் களமிறங்கியது. மீடியாக்கள் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ரசிகர்கள் மனதில் பதிய வைக்கின்றனர். யுவராஜ் சிங்கின் ஆறாத வடுவுக்கு மருந்து போட நேரம் வந்துவிட்டது. இந்திய அணிக்காக பந்துவீசுகையில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவார்.

யுவராஜ் சிங்

பின்னர் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களான லீ, ஜான்சன், ஷான் டெய்ட் ஆகியோரின் பந்துகளை தனது பேட்டை சுழற்றி பவுண்டரிக்கு விரட்டி இந்தியாவை வெற்றிபெற வைப்பார். அந்த பவுண்டரியை அடித்துவிட்டு, மைதானத்தில் கண்ணீர் விட்ட காட்சியைக் கண்டபோது ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. 2003ல் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுத்து, இறுதிப் போட்டியில் வென்று சச்சினை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார் யுவராஜ் சிங். தோனி சிக்ஸரை பறக்கவிட்டதும் நிச்சயம் யுவியின் கண்கள் சச்சினைதான் தேடியிருக்கும். உயிரைக் கொடுத்து வென்று கொடுத்துவிட்டேன் என பெருமகிழ்ச்சியோடு தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார் யுவராஜ் சிங்.

சச்சினுடன் யுவராஜ் சிங்

இந்தியாவே யுவியை கொண்டாடிய வேலையில், யுவியின் கிரிக்கெட் வாழ்க்கையை அஸ்தமனம் ஆக்குவதைப் போல் ஒரு செய்தி. இந்திய நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் யுவி கேன்சரால் பாதிக்கப்பட்டார். யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடியும் நேரம் வந்துவிட்டது என பத்திரிகைகள் எழுதியபோது, மரணத்தையும் வென்றெடுத்து மீண்டு வந்தார். கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்ந்தார். போராட்டமே வாழ்க்கை என்பவர்களுக்கு யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை பார்த்தால் தெரியும். போராட்டத்தை எவ்வளவு எளிதாக யுவி கையாண்டார் என்பது. ஒவ்வொரு முறையும் வீழ்ந்துவிட்டார்... வீழ்ந்துவிட்டார் என பேசியவர்களுக்கு நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என பதிலடிகளை மட்டுமே கொடுத்தார்.

உலகக்கோப்பையுடன் யுவி

இந்திய அணியில் யுவராஜின் இடம் என்றும் காலியாகதான் இருக்கும். கபில் தேவ் இடத்தை யாராலும் எப்படி நிரப்ப முடியாதோ, அதேபோல் யுவராஜ் சிங்கின் இடத்தையும் எந்த வீரராலும் நிரப்ப முடியாது. இதுவரை செய்த போராட்டங்கள் போதும் யுவி... கொஞ்சம் ஓய்வெடுங்கள்... வி ஆல்வேஸ் மிஸ் யூ யுவி!

யுவராஜ் சிங்

ABOUT THE AUTHOR

...view details