தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2019, 2:54 PM IST

ETV Bharat / sports

'சார் நான் வேணும்னே பண்ணல...!' சதம் அடித்த மகிழ்ச்சியில் நடுவரை தள்ளிவிட்ட வீரர்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின்போது, இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சதம் அடித்த பின்னர் ஓடிவந்து மோதியதில் நடுவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

jason roy

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் ஆட பணித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜானி பெய்ர்ஸ்டோ ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

அப்போது ஜேசன் ராய் 96 ரன்னில் ஆடிக்கொண்டிருந்தபோது, முஸ்டபிஸுர் வீசிய 27ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி அடித்தார். அவர் பந்து பவுண்டரியின் எல்லைக்கோட்டை அடைந்து விட்டதா என்று பார்த்துக்கொண்டே, நான்-ஸ்ட்ரைக்கர் திசையை நோக்கி ஓடினார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த நடுவர் ஜோயல் வில்சன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதனால் நிலைதடுமாறிய அவர் தடாலென்று தரையில் விழுந்தார்.

ஜேசன் ராயின் செயலைப் பார்த்து சிரிக்கும் இங்கிலாந்து வீரர்கள்

இச்சம்பவம் இங்கிலாந்து அணி வீரர்கள் உள்ளிட்ட மைதானத்தில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த சிரிப்பலையை உண்டாக்கியது. இதில் நடுவருக்கு காயம் ஏதும் ஏற்படாததால், அவர் மீண்டும் எழுந்து தொடர்ந்து நடுவர் பணியை செய்யத் தொடங்கினார்.

ஜேசன் ராய் குறித்த ட்விட்டர் பதிவு

இந்த நிகழ்வை உலகக்கோப்பை தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஜேசன் ராய் வித்தியாசமான முறையில் தனது சதத்தை கொண்டாடினார் என பதிவிட்டுள்ளனர். நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டுமே இழந்து 386 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது.

அதன்பின் சேஸ் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 280 ரன்களுக்கு ஆட்டடமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

ABOUT THE AUTHOR

...view details