புனேவில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் ரோகித் சர்மா-மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாரா - மயாங்க் அகர்வால் ஜோடி நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
#INDvSA: சதத்தை நோக்கி மயாங்க் அகர்வால்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வாலுக்கு அமைந்துள்ளது.
நிதானத்துடன் பேட்டிங் செய்த புஜாரா டெஸ்ட் போட்டியில் தனது 22ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில், ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக பேட்டிங் செய்துவந்த மயாங்க் அகர்வால் தனது ஐந்தாவது அரைசதத்தை அடித்தார். இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்த நிலையில் புஜாரா 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி முதல்நாள் தேநீர் இடைவேளையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்துள்ளது. 171 பந்துகளை எதிர்கொண்ட மயாங்க் அகர்வால் 15 பவுண்டரிகள் உள்பட 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
மறுமுனையில், கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார். இப்போட்டியிலும் சிறப்பாக பேட்டிங் செய்துவரும் மயாங்க் அகர்வால் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.