இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியதிலிருந்து கோலியின் கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன. அரையிறுதிப் போட்டிவரை நான்காவது இடத்திற்கான வீரரை தேர்வு செய்யாமல் ஒவ்வொருவரையும் பரிசோதனை மட்டுமே கோலி செய்து வந்தார் போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் சிலர் கூறினர்.
இதனால், இந்திய அணி நாடு திரும்பியதும் தோல்வி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அப்படி ஒரு கூட்டமும் நடைபெறவில்லை. மாறாக, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு கோலியே மூன்று வடிவ (டி20,டெஸ்ட்,ஒருநாள் தொடர்) அணிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது பல முன்னாள் வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கோலியை மீண்டும் கேப்டனாக்கியது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.