டெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காமல் இருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியிருப்பதாவது; 'ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த தொடரிலிருந்து பாதியிலேயே கோலி போன்ற வீரர் வெளியேறுவது ஏமாற்றம் அளிக்கிறது. அதே சமயம் சிறிது ஆச்சர்யமாகவும் உள்ளது. ஏனென்றால் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியத்தொடராக அமையும் விதமாக, இந்த தொடர் முன்னதாக அமைந்திருந்தது. இருப்பினும், குடும்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்' என்றார்.
டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்குப் பின்னர், தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் கோலி நாடு திரும்ப பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.