ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரைக் எர்வின் 85 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் லசித் எம்புல்தேனியா ஐந்து, சுராங்கா லக்மல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி ஏஞ்சலோ மேத்யூஸின் இரட்டை சதத்தால் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 515 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 468 பந்துகளில் 16 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 200 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும்.
இதையடுத்து, 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஜிம்பாப்வே அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 92 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சீன் வில்லியம்ஸ் 39, பிரன்டன் டெய்லர் 38 ரன்கள் அடித்தனர். இலங்கை அணி தரப்பில் சுராங்கா லக்மல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.