ரோகித் ஷர்மா குறித்து பல்வேறு கருத்துக்களை விக்ரம் ரத்தோர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
"ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் ஷர்மாவால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, ஏன் அவரால் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கான நேரம் அமையும் போது நிச்சயம் டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரராக வலம்வருவார். அப்படி நடந்தால், அது இந்திய அணிக்கு கிடைக்கும் கூடுதல் பலமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
ரசிகர்களால் ஹிட்மேன் என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். தனது அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்த ரோகித் ஷர்மா தற்போது டி20, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாகவும் விளங்குகிறார். ஒருநாள், டி20 என இரண்டு விதமான போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், இவரால் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் இருந்தது. அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் ஓப்பனிங்கில் சொதப்பியதால், இனி ரோகித் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்கப்படுவார் என இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா தொடக்க வீரராக களமிறக்கப்பட வேண்டும்- கில்கிறிஸ்ட்
அதன்படி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் ஷர்மா இடம்பெற்றுள்ளார். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி விசாகாப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதில், ரோகித் ஷர்மா இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா மூன்று சதம், 10 அரை சதம் என 1585 ரன்களை எடுத்துள்ளார். இறுதியாக, கடந்த ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் 63 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.