இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தற்போது பல்வேறு நகரங்களில் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில், எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை - பரோடா அணிகளுக்கு இடையிலான போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, முதல் இன்னிங்ஸில் 106.4 ஓவர்களில் 431 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, ஷாம்ஸ் முலானி 89, ரஹானே 79, பிரித்வி ஷா 66 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பரோடா அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதர் தேவ்தார் 160 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் ஷாம்ஸ் முலானி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, 124 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 179 பந்துகளில் 19 பவுண்டரி, ஏழு சிக்சர் என 202 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் தரப் போட்டியில் அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும்.