தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

23 ஆண்டுகால ஆஸி. பகைக்கு முற்றுப்புள்ளி - இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத மகத்தான நாள்!

1987 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவிடம் வரிசையாக தோல்வியைச் சந்தித்துவந்த இந்திய அணி 2011இல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

By

Published : Mar 24, 2020, 11:24 PM IST

On this day: Yuvraj Singh ended Australia's World Cup hopes
On this day: Yuvraj Singh ended Australia's World Cup hopes

2003 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர் என்றால் அது 2011தான். அதற்கு முக்கிய காரணம் 2003இல் நூலளவில் கலைந்த கனவு 2011இல் நனவானது. 2011உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (மார்ச் 24) இதே நாளில், இந்த தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியா, அப்போதைய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

2003 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மோதிய இவ்விரு அணிகள் இம்முறை காலிறுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தியது. இதனால், பெரும்பாலானா 90'ஸ் கிட்ஸ், இந்தப் போட்டியைக் காலிறுதிப் போட்டியாக பார்க்காமல், 2003 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியாகவே பார்த்தனர்.

தற்போது உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீராவில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதுவரை ஃபார்மில் இல்லாத ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங் இப்போட்டியில் சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பினார். இதனால் மீண்டும் இந்திய ரசிகர்களுக்கு 2003 உலகக்கோப்பையின் நினைவலைகள் மனதிற்குள் ஓடியது.

ஆனால், பாண்டிங்கைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் ஜாகிர் கான், யுவராஜ் சிங், அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சுக்கு எதிர்கொள்ள முடியாமல் திணறியதால், ஆஸ்திரேலிய அணி 260 ரன்களை குவித்தது. இது 2003 உலகக்கோப்பையைவிட ஆஸ்திரேலிய அணி 99 ரன்கள் குறைவாகவே எடுத்தது. அதேசமயம், வாட்சன் விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே, தோனி அஷ்வினை இப்போட்டியில் களமிறக்கினார். அதன் பலன், விரைவில் கிட்டியது. பவர்-பிளே ஓவரில் வாட்சனை அஷ்வின் போல்ட் ஆக்கினார்.

சச்சின்

இதையடுத்து, இந்திய அணியில் சேவாக், டெண்டுல்கர் வழக்கம்போல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்தத் தொடரில் அதுவரை எதிர்கொண்ட முதல் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்ட சேவாக், இந்தப் போட்டியில் பிரட் லீயின் பந்தை டிஃபென்ஸ் ஷாட் ஆடினார். ஆனால், மறுமுனையில் இருந்த சச்சின் தனது முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். சேவாக்கை விடவும், சச்சின் அன்றைய நாளில் கான்ஃபிடென்ட்டாக ஆடினார்.

சேவாக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில், சச்சின் அரைசதம் அடித்த கையோடு 53 ரன்களில் பெவிலியன் திரும்ப,இந்திய அணி 2003இல் ஆஸி.யிடம் தோல்வியடைந்ததை போல் மீண்டும் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் இந்திய ரசிகர்களுக்கு வந்தது. ஆனால், அந்த அசத்தை தனது சிறப்பான பேட்டிங்கால் யுவராஜ் சிங், கவுதம் கம்பிர் போக்கினர்.

இருவருக்கு இடையே ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் செட் பேட்ஸ்மேனாக இருந்த கம்பிர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களத்தில் வந்த தோனியும் சொதப்ப, யுவராஜ் சிங் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக வெளுத்துக்கட்டினார். அவரை எந்த ஆஸ்திரேலிய வீரர்களாலும் அன்று கட்டுப்படுத்த முடியாமல் போனது. ரெய்னாவும் தன் பங்கிற்கு பவுண்டரிகளை விளாச இந்திய ரசிகர்களுக்கு இப்போட்டியில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை வந்தது.

இந்திய அணி 47.4 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டிய ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வெளியேற்றியது. இதன்மூலம், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 23 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுடனான தனது பழைய பகையை தீர்த்துகொண்டது. 1987இல் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அதன்பின், 1992, 1996, 1999, 2003 ஆகிய நான்கு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

யுவராஜ் சிங்

1983இல் எப்படி கிளைவ் லாயிட்டின் ஹாட்ரிக் உலகக் கோப்பை கனவை (1975, 1979) கபில்தேவ் தகர்ந்தெறிந்தாரோ, அதுபோலவே, ரிக்கி பாண்டிங்கின் ஹாட்ரிக் உலகக் கோப்பை (2003, 2007) கனவையும் தோனி தவிடுபொடியாக்கினார். இந்த போட்டியில் மிகச் சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதையும் படிங்க:இந்திய ரசிகர்களை ஆற்றுப்படுத்திய ’ஸ்ப்ரிங்’ பேட் வதந்திகள்... தொடரும் புதிர்!

ABOUT THE AUTHOR

...view details